பிறப்பு சான்றிதழ்.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய சிக்கல்.. ஐகோர்ட் வரை சென்று ஜெயித்த விஏஓ
மதுரை: அரசு பணியில் 80களில், 90களில் சேர்ந்தவர்களுக்கு பள்ளி சான்றிதழ் அடிப்படையில் பிறந்த நாளை அதிகாரிகள் பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் அவர்களாக ஒரு நாளை பிறந்த நாளாக பதிவு செய்தாலோ அல்லது அவர்களாக ஒரு ஆண்டை பதிவு செய்தாலே ஓய்வு பெறப்போகும் காலத்தில் சிக்கல் வரும். ஏனெனில் பிறப்பு சான்றிதழ் விவகாரம் அந்த அளவிற்கு முக்கியமானதாக மாறி உள்ளது.மதுரை விஏஓ ஐகோர்ட் வரை சென்று இந்த விவாகரத்தில் தனக்கான பணப்பலனை போராடி வென்றுள்ளார்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த மார்க்கண்டன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், நான் கடந்த 20.3.1983 அன்று கிராம தலையாரி பணியில் நியமிக்கப்பட்டேன். என்னுடைய வயது சான்றுக்காக பள்ளி மாற்றுச்சான்றிதழை சமர்ப்பித்து இருந்தேன். ஆனால் அதில் இருந்த பிறப்பு தேதிக்கு பதிலாக வேறொரு தேதியை என்னுடைய பணிப்பதிவேட்டில் எழுதிவிட்டார்கள். இந்த விவகாரம் 2015-ம் ஆண்டில்தான் எனக்கே தெரியவந்தது.

இதுகுறித்து அரசு உயர் அதிகாரிகளிடம் நான் தெரிவித்து இருந்தேன். 2016-ம் ஆண்டில் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு பெற்றேன். அந்த பணியில் இருந்த சமயத்தில், பிறப்பு தேதி விவகாரம் காரணமாக என்னுடைய பதவி உயர்வை உயர் அதிகாரிகள் நிராகரித்திருந்தார்கள்.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பதவி உயர்வை மீண்டும் பெற்று கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றினேன். 2019-ம் ஆண்டில் ஓய்வு பெற்றேன். பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்ட 13 மாதங்களுக்கு உரிய பணப்பலன்களை வழங்க அதிகாரிகள் மறுத்து வருகிறார்கள். அந்த பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்.. இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆர்.கருணாநிதி ஆஜராகி, மனுதாரர் பிறந்த தேதி மாறியதை காரணமாக வைத்து மனுதாரரை 1.2.2018 முதல் 18.3.2019 வரை பணியாற்ற அதிகாரிகள் அனுமதிக்கவே இல்லை. ஆனால் அவர் பணி நீக்கமும் செய்யப்படவில்லை. எனவே அவர் உரிய பணப்பலன்களை பெற தகுதியானவர் என வாதாடினார்.
விசாரணை முடிவில், மனுதாரருக்கு வழங்கிய பதவி உயர்வினை நிறுத்தி வைத்ததற்கு எதிராக அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே வேலை இல்லை என்றால் ஊதியம் இல்லை என்பது மனுதாரருக்கு பொருந்தாது. எனவே 1.2.2018 அன்று முதல் 18.3.2019 வரையிலான காலத்துக்கு உரிய பணப்பலன்களை மனுதாரருக்கு 4 வாரத்தில் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பட்டு தேவானந்த் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications