250 கிலோ எடை, 18 அடி உயரம்.. கருப்பசாமிக்காக ரெடியாகும் மெகா அரிவாள்! அண்ணாந்து பார்க்கும் பக்தர்கள்
மதுரை: மதுரை அழகர்கோவிலுக்கு நேர்த்திக்கடனாகக் கொடுக்க 18 அடி உயரத்தில் ரெடியாகியுள்ள 250 கிலோ எடை கொண்ட அரிவாள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழ்நாடு முழுக்க கிராமப்பகுதிகளில் சிறு தெய்வ வழிபாடு என்பது இன்னும் முக்கியமான ஒன்றாகவே இருந்து வருகிறது. ஒட்டுமொத்த ஊரே சேர்ந்து அப்பகுதியில் இருக்கும் சிறு தெய்வங்களுக்கு வழிபாடு நடத்துவார்கள்.
தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் இந்த சிறு தெய்வங்களுக்குப் பக்தர்கள் பல்வேறு விஷயங்களை நேர்த்திக்கடனாக அளிப்பார்கள். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
“ஜாதி” இல்லாத ஜல்லிக்கட்டு.. யாருக்கும் முதல் மரியாதை இல்லை! “ரோல் மாடலான” மதுரை அவனியாபுரம்
மதுரை அழகர்கோவில்
மதுரை அழகர்கோவிலுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் எப்போதும் வருகை தருவார்கள். இவர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுமாறு வேண்டிக் கொள்வார்கள். அதன்படி வேண்டுதல் நிறைவேறினால், அவர்கள் பல விஷயங்களை நேர்த்திக்கடனாக வழங்குவார்கள். அப்படித்தான் மதுரை சர்வேயர்காலனி பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மதுரை அழகர்கோவிலுக்கு 18 அடி உயரத்தில் 250 கிலோ எடை கொண்ட அரிவாளை நேர்த்திக்கடனாகத் தர உள்ளனர்.
அரிவாள்
இந்த அரிவாள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள ஒரு பட்டறையில் பக்காவாக ரெடியாகி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், திருப்பாசேத்தி உள்ளிட்ட பகுதிகளில் ஏகப்பட்ட அரிவாள் பட்டறைகள் உள்ளன. அப்பகுதி விவசாயிகளுக்குத் தேவையான கோடாரி, மண்வெட்டி, கதிர் அரிவாள், உள்ளிட்டவை இங்கு தான் தயாரிக்கப்படும். இது மட்டுமின்றி வீடுகளில் பயன்படுத்தப்படும் அரிவாள், விறகு வெட்டப் பயன்படும் அரிவாளும் இங்கு தான் தயாரிக்கப்படும்.
பட்டறை
இங்குள்ள ஒரு பட்டறையில் தான் இப்போது அந்த பிரம்மாண்ட அரிவாள் தயாராகி உள்ளது. இது குறித்து அவர்கள் கூறுகையில், "கோயிலுக்கு நேர்த்தகடன் தர வேண்டும் என்று 18 அடிக்கு அரிவாள் வேண்டும் எனக் கேட்டார்கள். மதுரை சர்வேயர்காலனி பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தான் இந்த மெகா அரிவாளை நேர்த்திக்கடனுக்காகக் கேட்டார்கள். ஒரு அடிக்கு இரண்டாயிரம் ரூபாய் என்ற அரிவாளைத் தயாரித்துக் கொடுத்துள்ளோம்.
250 கிலோ
இந்த 18 அடியில் கீழே மூன்று அடியில் கைப்பிடி அமைந்துள்ளது. அரிவாள் 15 அடியில் தயாரித்து உள்ளோம். கடந்த 20 நாட்களாகவே இந்த அரிவாளைத் தயார் செய்து வருகிறோம். இந்த அரிவாளின் மொத்த எடை 250 கிலோ ஆகும். மதுரை அழகர்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசுவாமிக்கு நேர்த்திக்கடனாகத் தர இந்த அரிவாள் வேண்டும் என அவர்கள் கேட்டார்கள். இதை இப்போது மதுரைக்குப் பாதுகாப்பாகப் பெரிய சரக்கு வேன் மூலம் எடுத்துச் செல்லப்பட உள்ளது.
வீடியோ
இது தொடர்பான வீடியோ மற்றும் ஃபோட்டோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. பலரும் இந்த இணையத்தில் பகிரப்படும் இந்த மெகா அரிவாளின் புகைப்படத்தை ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள். இந்த மெகா அரிவாள் இன்னும் சில நாட்களில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமிக்கு நேர்த்திக்கடனாக்க அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.