மதுரை எய்ம்ஸ் மருத்துவனை.. உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு கொடுத்த டைம்.. பரபரப்பு தீர்ப்பு
மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 36 மாதங்களுக்குள் கட்டிமுடிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் கட்டி முடித்து, செயல்பாட்டுக்குக் கொண்டு வரக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்து வந்தார்.
இந்த வழக்கில் முன்னதாக தமிழக அரசு வாதங்களின் போது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக முதலில் 200 ஏக்கர் நிலமும், பின்னர் 23 ஏக்கர் நிலமும் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது என்ற கூறியது. பின்னர் அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தது.

எப்போது பணி
மத்திய அரசோ, "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை தமிழக அரசு மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டது. தற்போது கட்டுமான பணிகளுக்கு கடன் ஒப்பந்தம் தொடர்பாக ஜப்பானிய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மார்ச் மாத இறுதிக்குள் கடன் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு நிதி கிடைத்துவிடும். அதன்பின் பணிகள் தொடங்கி 45 மாதங்களில் கட்டுமான பணிகள் முடிக்கப்படும் என கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் உறுதி அளித்தது.

தீர்ப்பு
இந்த வழக்கின் மீது நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு இன்று அளித்த தீர்ப்பளித்தது. அப்போதுநீதிபதிகள் கூறும் போது. ''தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்ட்ட போது தான், பிற மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பிற மாநிலங்களில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் ஏறத்தாழ முடிவடையும் நிலையில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை.

எப்போது முடியும்
எய்ம்ஸ் பணி தொடர்பான ஒவ்வொரு நகர்வுக்கும் மனுதாரர் நீதிமன்றத்தை நாடியே ஆணை பெற்றுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்காமல் எய்ம்ஸ் பணிகளை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும். இந்த உத்தரவு நகல் கிடைக்கப் பெற்ற நாளில் இருந்து 36 மாதத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது'' இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

விளக்கம்
இதனால் மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிதியை உடனடியாக ஒதுக்கி, பணியை துரிதப்படுத்தப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். முன்னதாக மத்திய அரசு கடந்த வாரம் அளித்த பதிலில் மதுரை எய்ம்ஸ் திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்வதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அது தவிர வேறு எந்த டெண்டரும் விடப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் தொடங்கும் தேதி தற்போது இல்லை. மதுரை எய்ம்ஸ் கட்டி முடிப்பதற்கான திருத்தப்பட்ட இலக்கு நிறைவு தேதி இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. எத்தனை கட்டங்களாக பணிகள் நடைபெறும் மற்றும் ஒவ்வொரு கட்டத்திலும் என்னென்ன கட்டிடங்கள் வரும் என்பது பற்றிய தகவல்கள் இல்லை. விரிவான திட்ட மதிப்பீடு பற்றிய தகவல்களும் இல்லை. மதுரை எய்ம்சில் மருத்துவ மாணவர் சேர்க்கை, வகுப்புகளை தொடங்குவதற்கான முன்மொழிவு மாநில அரசின் பரிசீலனையில் உள்ளது. விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை" என்று கூறியிருந்தது.












Click it and Unblock the Notifications