மதுரை தூய்மை பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு! எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்த மாவட்ட நிர்வாகம்
மதுரை: மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் மதுரை கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்றச் சங்கம், துப்புரவுத் தொழிலாளர்கள் மேம்பாட்டுச் சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் என 3000க்கும் மேற்பட்டோர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள மேலவாசல் பகுதியில் நேற்று தொடங்கிய இந்தப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் கூட தொடர்ந்தது.
நாறும் மதுரை..கலெக்டர் ஆபிசில் கழிவு நீர் ஆறு..வாக்குறுதியை நிறைவேற்றுங்க - எடப்பாடி பழனிச்சாமி
அபாயம்
இதனால் கடந்த இரு நாட்களாக மதுரையில் குப்பைகள் மற்றும் கழிவு நீர் அகற்றம் உள்ளிட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதன் காரணமாக மதுரையில் சுமார் 2000 டன்களுக்கு மேலாகக் குப்பைகள் தேக்கம் அடைந்தனர். குப்பைகள் அதிகம் தேங்கியதால் ஆங்காங்கே துர்நாற்றமும் வீசத் தொடங்கியது. இதனால் மிகப் பெரிய சுகாதார சீர்கெடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
28 அம்ச கோரிக்கை
தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், கொரோனா நிவாரண தொகை,, 7ஆவது ஊதிய பணப்பலன் உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தத் தொடங்கினர். போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்ததால் மதுரை மக்கள் பெரும் இன்னலை எதிர்கொண்டனர். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் திமுக அரசைச் சாடி இருந்தார்.
ஈபிஎஸ் அட்டாக்
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கொடுத்திருந்த தூய்மை பணியாளர்களுக்கான ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றினாலே தூய்மை பணியாளர்கள் பணிக்குத் திரும்புவார்கள் என்று குறிப்பிட்ட அவர், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே கழிவு நீர் ஆறுபோல ஓடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இந்த விடியா அரசு உடனடியாக மதுரை தூய்மை பணியாளர்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
உடன்பாடு
இந்தச் சூழலில் மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் முன்னிலையில் நடந்த 5ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைப்பு
28 கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக மாநகராட்சி தொழிற்சங்கங்கள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை முதல் மதுரையில் தூய்மை பணியாளர்கள் பணிக்குத் திரும்ப உள்ளனர்,