ஆ.ராசா நாக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு.. பகிரங்க மிரட்டல் விடுத்த இந்துத்வா நிர்வாகி அதிரடி கைது!
மதுரை : திமுக எம்.பி ஆ.ராசா இந்துக்களுக்கு எதிராக பேசியதாக குற்றம்சாட்டி அவரது நாக்கை அறுத்துக்கொண்டு வருபவருக்கு ரூ. 1 கோடி பரிசு என ஃபேஸ்புக்கில் பதிவு செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் இந்து மதம் குறித்து திமுக எம்.பி ஆ.ராசா பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவின் பேச்சு இந்து மதத்தை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ஆ.ராசாவின் நாக்கை அறுத்துக்கொண்டு வருபவருக்கு ரூ.1 கோடி ரொக்கமும், ஒரு ஏக்கர் நிலமும் தருவதாக இந்து மக்கள் புரட்சி படை மாநில செயலாளர் கண்ணன் என்பவர் ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார்.
இதையடுத்து திமுகவினர் அளித்த புகாரின் பேரில், உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

ஆ.ராசா பேச்சால் வெடித்த சர்ச்சை
சமீபத்தில் சென்னையில் நடந்த திராவிடர் கழக நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, "இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன் தான், நீ பஞ்சமன் தான். இந்துவாக இருக்கும் வரை தீண்டதகாதவன். சூத்திரன் என்றால் விபச்சாரியின் மகன் என்று இந்து மதம் சொல்கிறது. இன்னும் எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார். ஆ.ராசாவின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இந்து மதம் குறித்து இழிவாகப் பேசிய ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் கூறி வருகின்றனர்.

நாக்கை அறுத்தால் 1 கோடி
இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசுக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் என்பவர் ஆ.ராசாவுக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்து மக்கள் புரட்சி படை எனும் அமைப்பின் மாநில செயலாளராக இருந்து வரும் கண்ணன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், ஆ.ராசாவின் நாக்கை அறுத்துக் கொண்டு வருபவருக்கு ஒரு கோடி ரொக்கமும், ஒரு ஏக்கர் நிலமும் பரிசாக வழங்கப்படும் என்று பதிவிட்டிருந்தார்.

1 கோடி, ஒரு ஏக்கர் நிலம்
கண்ணன் வெளியிட்ட பதிவில், "இந்திய திருநாட்டில் செய்த சத்திய பிரமாணத்தை மறந்து அன்னிய நாட்டின் கைக்கூலி போல் செயல்படும் திமுக எம்.பி ஆ.ராசாவை வன்மையாக கண்டிக்கிறோம். இந்துக்களை விபச்சாரிகள் எனக்கூறி வரும் ஆ.ராசாவின் நாக்கை அறுத்து கொண்டு வரும் காவி ஆண் மகனுக்கு ரூபாய் ஒரு கோடியும், ஒரு ஏக்கர் நிலமும் பரிசாக வழங்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.

அதிரடி கைது
அவரது இந்த ஃபேஸ்புக் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக திமுகவினர் ஆதாரத்துடன் உத்தப்பநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, இந்து மக்கள் புரட்சி கட்சியின் மாநில செயலாளர் கண்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications