மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் சுந்தரம்! 12 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்பு
மதுரை: மதுரையில் பல கோடி சொத்துகளை எழுதி வாங்கும் நோக்கில் கடத்தப்பட்ட தொழிலதிபர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை பீ.பீ.குளத்தை சேர்ந்த தொழிலதிபர் கருமுத்து சுந்தரராமன் (56). இவருக்கு பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் இவற்றை அபகரிக்க, கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி இவரை 10-க்கும் மேற்பட்டோர் கடத்தி சென்றனர். இதைத் தொடர்ந்து அவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் கடந்த 14ஆம் தேதி வெளியானது.

இது தொடர்பாக புகாரில் தல்லாக்குளம் போலீஸார் 6 பேரை கைது செய்தனர். சுந்தரத்தை மீட்க தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் கனடாவிலிருந்து சுந்தரத்தின் சகோதரி விசாலாட்சி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அதில் என் சகோதரர் எந்த நிலையில் எப்படி இருக்கிறார் என்ற வீடியோவை போலீஸார் வெளியிட வேண்டும். எனது சகோதரரை மீட்க தமிழக முதல்வர் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் சுந்தரராமன் விரைவில் மீட்கப்படுவார் என போலீஸார் தெரிவித்திருந்தனர்.
சுந்தரராமன் திருமணம் செய்து கொள்ளாமல் தனது வீட்டில் தனியாகவே வசித்து வந்தார். இவருக்கு சொந்தமான நிலத்தை சிலர் வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்தது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் அந்த வழக்கில் சுந்தருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
இதை எதிர் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சுந்தரராமனுக்கு மிரட்டல் வந்து கொண்டே இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தொழிலதிபர் சுந்தரராமனை போலீஸார் பத்திரமாக மீட்டனர்.
மதுரை பாண்டிக்கோயில் பாலம் அருகே விரட்டி சென்று இருவரை போலீஸார் கைது செய்தனர். இந்த கடத்தலில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரவுடிக்கும் தொடர்பிருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும் இதுகுறித்து போலீஸார் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே யார் கடத்தியது என தெரியவந்தது.












Click it and Unblock the Notifications