எங்க பசங்களுக்கு இல்லாதது எதுக்கு?.. மாணவர்களுக்காக விடாமல் போராடும் சு.வெங்கடேசன்! நெத்தியடி ஆக்சன்
மதுரை: மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சியை புறக்கணித்த தனியார் வங்கியில் அரசு டெபாசிட் செய்திருந்த பணத்தை திரும்ப பெற வேண்டும் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். எம்.பியின் இக்கருத்துக்கு அமைச்சர் மூர்த்தியும் வரவேற்பளித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடைபெற்ற கல்விக்கடன் மேளாவை குறிப்பிட்ட தனியார் வங்கி புறக்கணித்திருந்த நிலையில், சு.வெங்கடேசன் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து அவர் தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டத்தில் விவாதம் நடத்தப்பட்டு டெபாசிட்டை திரும்ப பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கல்விக்கடன்
ஆண்டுதோறும் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்காக கல்விக்கடன் வழங்கும் மேளா நடைபெறுவது வழக்கம் கடந்த ஆண்டு ரூ.119.7 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டிலேயே அதிக அளவில் கல்விக்கடன் மதுரையில்தான் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்த மேளாவில் 291 மாணவர்களுக்கு ரூ.18.51 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினரான சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

புறக்கணிப்பு
ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விக்கடன் மேளாவில் பங்கேற்றிருந்த வங்கிகள் கோடி கணக்கில் கல்விக்கடன் வழங்கிய நிலையில், ஒரேயொரு தனியார் வங்கி மட்டும் வெறும் ரூ.38.87 லட்சத்தை கடனாக வழங்கியிருந்தது. இந்நிலையில், தற்போது நடைபெற்ற கல்விக்கடன் மேளாவை அந்த வங்கி புறக்கணித்திருக்கிறது. கல்விக்கடன் கொடுப்பதன் அவசியத்தை மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இவ்வாறு மாணவர்களுக்கு கடன் கொடுக்க முன் வராமல் தனியார் வங்கி புறக்கணித்திருந்ததை பலர் விமர்சித்திருந்தனர்.

கேள்வி
இந்நிலையில், அந்த குறிப்பிட்ட தனியார் வங்கியில் அரசு டெபாசிட் செய்திருந்த பணத்தை வேறு வங்கிக்கு மாற்ற வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் டிவிட்டரில், "எங்கள் மாணவர்களுக்கு கல்விக்கடன் தர மறுக்கும் வங்கிகளில் அரசின் பணம் ஏன் டெபாஸிட் செய்யப்பட வேண்டும்? மதுரை - கல்விக்கடன் மேளாவில் பங்கெடுக்காத தனியார் வங்கியில் அரசு செய்துள்ள டெபாஸிட் தொகையை திரும்பப்பெறுவோம். எரிவதை பிடுங்கினால், கொதிப்பது அடங்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முடிவு
இது தொடர்பாக ஏற்கெனவே நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டத்தில் விவாதம் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் டெபாசிட் தொகையை வேறு வங்கிக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல கல்விக்கடன் மேளாவில் பங்கேற்றிருந்த அமைச்சர் மூர்த்தியும், எம்.பி சு.வெங்கடேசனின் கருத்துக்களுடன் ஒன்றி போனதால் டெபாசிட்டை வேறு ஒரு வங்கிக்கு மாற்றுவது குறித்து எவ்வித ஆட்சேபனையும் மேலெழவில்லை. கல்விக்கடன் வழங்காமல் புறக்கணித்த வங்கியில் அரசு பணத்தை டெபாசிட் செய்ய மாட்டோம் என்று எம்பி ஒருவரே வெளிப்படையாக பேசியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications