உத்தரகாண்டில் தேர்வு மையம்.. சிக்கலில் தமிழக இளைஞர்.. சு.வெங்கடேசனுக்கு அதிகாரி அளித்த அலட்சிய பதில்
மதுரை: மத்திய அரசு பணிக்கான தேர்வை எழுத தமிழகத்தைச் சேர்ந்த இளைஞருக்கு வடமாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை மாற்றக் கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்த நிலையில், தேர்வு மையம் ஒதுக்கீட்டில் மனித தலையீடுகள் இல்லை என்று பதிலளிக்கப்பட்டுள்ளது. இதனை சு.வெங்கடேசன் காட்டமாக விமர்சித்து பதிவிட்டுள்ள ட்வீட் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காக தொடர்ந்து மத்திய அரசை கேள்வி கேட்டு வருபவர். குறிப்பாக மாணவர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பவர்.
மத்திய அரசின் வேலைவாய்ப்புக்கான தேர்வுகள், மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு உள்ளிட்டவற்றை எழுத தமிழக மாணவர்களுக்கு வடமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்குவது தொடர்கதையாகி வருகிறது.
மத்திய பல்கலை. நுழைவுத் தேர்வு! மதுரை மாணவனுக்கு லட்சத்தீவில் தேர்வு மையம்! கொதித்தெழும் வெங்கடேசன்!
அலைக்கழிக்கப்படும் இளைஞர்கள்
மத்திய அரசால் நீட் தேர்வு நடத்தப்பட்ட முதல் ஆண்டு முதலே, தமிழக மாணவர்களுக்கு வடமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு முறை, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியும், மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவது வழக்கமாகி வருகிறது.
சிக்கலில் தமிழக இளைஞர்
அந்த வகையில் அண்மையில் கோவையைச் சேர்ந்த அனில்குமார் என்பவர் பாதுகாப்புத்துறை தொடர்பான மத்திய அரசின் பணிக்கு விண்ணப்பித்துள்ளார். அவருக்கான தேர்வு மையம், உத்தரகாண்ட் மாநில கனாசரில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அனில்குமார், தேர்வு மையத்தை மாற்றக் கோரி விண்ணப்பித்துள்ளார். இந்த விவகாரத்தை அறிந்த மதுரை எம்பி சு.வெங்கடேசனும், தேர்வு மையத்தை மாற்றக் கோரிக்கை வைத்துள்ளார்.
மனித தலையீடு இல்லை
ஆனால் தேர்வினை நடத்தும் மத்திய அரசு அதிகாரிகள், தேர்வு மையம் ஒதுக்கீடு விவகாரங்களில், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படை பின்பற்றப்படுகிறது. தேர்வர்கள் குறிப்பிட்ட ஆப்ஷன்களின் படியே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க இயந்திரத்தின் பணியே அன்றி, மனித தலையீடுகள் கிடையாது என்று பதிலளிக்கப்பட்டது.
இயந்திரத்தனமான பதில்
இதனால் கோவையைச் சேர்ந்த அனில்குமார், உத்தரகாண்ட் சென்று தேர்வினை எழுதும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சு.வெங்கடேசன், இயந்திரம் இயந்திரத்தனமாகத்தான் இருக்கும். ஆகவேதான் மனித தலையீடு வேண்டும் என்று கேட்டோம். ஆனால் மனிதர்களிடம் இருந்தும் இயந்திரத்தனமாக பதில் வருகிறது என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.