குழந்தை திருமணம் செய்வோருக்கு பாடம்.. ராணுவ வீரருக்கு 22 வருடம் ஜெயில்.. என்ன நடந்தது?
மதுரை: போக்சோ வழக்கில் ராணுவ வீரருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கின் சாட்சியான சிறுமி உடல்நலக்குறைபாட்டால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள சீப்பாளகோட்டையை சேர்ந்த ராணுவ வீரரான பிரபு என்பவர் கடந்த 2013ஆம் ஆண்டு தனது உறவினரின் மகளான 15வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியை ராணுவ குடியிருப்பில் மனைவியின் வயதை அதிகரித்து போலியான தகவல்களை அளித்து தங்கவைத்தோடு சிறுமியை வெளியே விடாமல் வீட்டிற்குள் அடைத்து வைத்து மன உளைச்சல் ஏற்படுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாயப்படுத்தி திருமணம்
இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு தப்பியோடிவந்த சிறுமி ராணுவ வீரரான பிரபு தன்னை கட்டாயபடுத்தி திருமணம் செய்து துன்புறுத்தியதாக கூறி மதுரை மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

உடந்தையாக இருந்தார்
இதனையடுத்து பிரபு மீது போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடை சட்டத்தின் கீழும், குழந்தை திருமணத்திற்கு உதவியாக இருந்ததாக பிரபுவின் தாயார் கருப்பம்மாள் மற்றும் சிறுமியின் தந்தை பெத்தணசாமி ஆகிய மூவர் மீதும் மகளிர் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

10ஆயிரம் அபராதம்
இதனை தொடர்ந்து இந்த வழக்கானது மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கானது இன்று மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி ராதிகா முன்பாக விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கில் மூன்றுபேர் மீதும் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டதாக கூறி ராணுவ வீரரான பிரபுவிற்கு 22ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

சிறுமியின் தந்தைக்கும் சிறை
இதேபோன்று குழந்தை திருமணத்திற்கு உதவியாக இருந்த குற்றத்திற்காக ராணுவ வீரரான பிரபுவின் தாயார் கருப்பம்மாள் மற்றும் சிறுமியின் தந்தை பெத்தணசாமி ஆகிய இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை தலா 5ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவு பிறப்பித்தார்.
இதேபோன்று பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பிரபுவின் சார்பில் 50ஆயிரம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

உடல் நலக்குறைவு
நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே வழக்கின் முக்கிய சாட்சியான சிறுமி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடதக்கது. குழந்தை திருமண சட்டம் மற்றும் போக்சோ வழக்கின் கீழ் ராணுவ வீரருக்கு 22ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆணையர் பாராட்டு
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை பெற்றுகொடுத்து மதுரை மாநகர் தெற்கு அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினரை மாநகர காவல் ஆணையர் பி்ரேம் ஆனந்த் சின்ஹா வெகுவாக பாராட்டினார்.












Click it and Unblock the Notifications