மதுரையில் சாதி மாறி திருமணம் செய்த பெண்... மணமகனின் தந்தையை வெட்டி கொன்ற பெண்ணின் தந்தை
மதுரையில் மகள் காதல் திருமணம் செய்துகொண்ட ஆத்திரத்தில் காதலனின் தந்தையை வெட்டிகொலை செய்து விட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை: சாதி ஆணவக்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. மதுரையில் சாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த மணப்பெண்ணின் தந்தை, மணமகனின் தந்தையை வாளால் வெட்டி கொன்றுள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் ராமச்சந்திரன். இவர் மதுரை திடீர் நகரில் வசித்து வந்தார். இவரது மகன் சிவ பிரசாத், அதே பகுதியைத் சேர்ந்த சடையாண்டி என்பவரின் மகள் சினேகாவை காதலித்தார்.
இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் சம்மதிக்கவில்லை. காதலிக்க தடை விதித்தாலும் அதையும் மீறி காதலித்தனர்.

காதல் திருமணம்
சினேகாவும் சிவ பிரசாத்தும் இரு வீட்டார் எதிர்ப்பை மீறி நேற்று திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து திடீர் நகர் காவல் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் இருவரது பெற்றோர்களையும் அழைத்து சமரசம் செய்து வைக்க முயற்சி செய்துள்ளனர்.

சமாதானப்பேச்சு
இந்த நிலையில் சிவ பிரசாத்தின் தந்தை ராமச்சந்திரன் மட்டும் காவல் நிலையத்திற்கு வந்து காவலர்களிடம் மகனின் திருமணத்தை ஏற்றுக்கொண்டதாக கூறி சமாதானமாக சென்று விட்டதாக தெரிகிறது. அதேபோல் சினேகாவின் தந்தை சடையாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் சமரச பேச்சுவார்த்தைக்கு காவல் நிலையத்திற்கு வரவில்லை என்று தெரிகிறது.

வாக்குவாதம்
நள்ளிரவு நேரத்தில் ராமச்சந்திரனை சந்தித்துள்ளார் சடையாண்டி. பெரியார் பேருந்து நிலையம் அருகே இருவருக்கும் இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது, அதனையடுத்து சடையாண்டி தான் மறைத்து வைத்திருந்த வாளால் ராமச்சந்திரனை வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ராமச்சந்திரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காவல் நிலையத்தில் சரண்
இதனையடுத்து சடையாண்டி காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் திடீர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்து கொண்ட மகள் மீதான ஆத்திரத்தில் மணமகனின் தந்தையை வெட்டி கொலை செய்து காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications