சித்திரை திருவிழாவை ரசிக்க மதுரைக்கு போறீங்களா?..தூங்கா நகரத்தில் சுற்றிப்பார்க்க இத்தனை இடங்களா?
சென்னை: சிவபெருமானும், பார்வதியும் ஆட்சி செய்த புராண சிறப்புடையது மதுரை. கூடல்நகர், தூங்காநகரம், மல்லிகை மணக்கும் மாநகர், நான்மாடக்கூடல், திரு ஆலவாய் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் மதுரை உலகின் தொன்மையான புராதன நகரங்களில் ஒன்று. பாண்டியர்களின் தலைநகரமாக விளங்கிய மதுரை பல வரலாற்றுச் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. சித்திரை திருவிழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் மதுரைக்கும் மக்கள் அங்கு காண வேண்டிய இடங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள மதுரை மாநகரம், தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாகவும், இந்தியாவின் புகழ்பெற்ற யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. மதுரை பாண்டியப் பேரரசின் ஆட்சி பீடமாக இருந்தது. பெரும்பாலும் தமிழ்நாட்டின் கலாச்சார தலைநகரமாக போற்றப்படுகிறது. மதுரை நகரம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடையது. மதுரை மக்கள் கோபக்காரர்கள் மட்டுமல்ல பாசக்காரர்கள் என பல திரைப்படங்களில் காட்சியமைக்கப்பட்டுள்ளது.

மதுரையின் மையப்பகுதியில் உலகப் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. மீனாட்சி அம்மன் கோயில், இந்தியாவின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை பல நாட்டு மக்களையும் ஈர்க்கிறது. சிவ பெருமான் பல்வேறு திருவிளையாடல்களை நிகழ்த்திய திருத்தலம் இதுவாகும். இது அனைவரும் தரிசிக்க வேண்டிய ஆலயமாகும். மீனாட்சியம்மன் கோயிலுக்கு எதிரே உள்ள புது மண்டபம் அழகிய சிற்பங்களுடன் கூடிய மண்டபமாக உள்ளது. இதுவும் பார்க்க வேண்டிய இடமாகும்.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தெற்கே திருமலை நாயக்கர் அரண்மனை உள்ளது. இந்த அரண்மனையை திருமலை நாயக்கர் 17ம் நூற்றாண்டில் கட்டியுள்ளார். 1629 முதல் 1636ம் ஆண்டு வரை இந்த அரண்மனையின் கட்டிட வேலைப்பாடுகள் நடைபெற்றது. கட்டிடத்தின் ஸ்திரத்தன்மைக்காக சுண்ணாம்பு, தன்றிக்காய், வெல்லம், கடுக்காய், நெல்லிக்காய் கலந்த கலவையை மேல்பூச்சாக அரண்மனையை எங்கும் பூசியுள்ளனர். இந்த அரண்மனையில் மொத்தமாக 48 அடி உயரமும் 12 அடி அகலமும் கொண்டு 248 தூண்கள் உள்ளன.

பெரியார் பேருந்து நிலையம் அருகிலேயே சிவபெருமான் எழுப்பிய இம்மையில் நன்மை தருவார் ஆலயம் உள்ளது. அதன் அருகிலேயே கூடல் அழகர் பெருமாள் கோவிலும் உள்ளது. வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் அற்புதமாக சுற்றுலா தலமாகும். இங்கு தை மாதம் நடைபெறும் தெப்பத்திருவிழா சிறப்பானது. மாலை நேரங்களில் தெப்பக்குளத்தின் அழகை ரசித்துக்கொண்டே முக்தீஸ்வரரை தரிசனம் செய்யலாம்.

காந்தி நினைவு அருங்காட்சியகம் நாட்டிலுள்ள ஐந்து காந்தி அருங்காட்சியகங்களில் ஒன்றாகும், அவை சுதந்திரப் போராட்டத்திற்கு நமது தேசத்தின் தந்தை ஆற்றிய பங்களிப்பை நினைவுகூரும் வகையில் நிறுவப்பட்டது. இந்த இடம் ராணி மங்கம்மாளின் அரண்மனையாக இருந்தது. 1959 ஆம் ஆண்டு இந்த அரண்மனை மகாத்மா காந்தி தேசிய நினைவு அறக்கட்டளையால் புதுப்பிக்கப்பட்டு காந்தி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. மகாத்மா காந்திஜி படுகொலை செய்யப்பட்ட போது அவர் அணிந்திருந்த இரத்தக் கறை படிந்த வேட்டி இங்கு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அழகர் கோவில். அங்குள்ள சுந்தரராஜ பெருமாள் கோவில் வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் சிறப்பானது. மூலிகை மரங்கள் சூழ்ந்த அழகர் கோவிலில் மலையேறி சென்றால் அங்கு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஆறாவது படை வீடான பழமுதிர்சோலை உள்ளது. இங்குதான் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா என ஔவையாரிடம் முருகப்பெருமான் கேட்ட தலம். ராக்காச்சியம்மன் கோவில், நூபுர கங்கை தீர்த்தத்தில் நீராடி முருகப்பெருமானையும் கள்ளழகரையும் தரிசனம் செய்யலாம்.
மதுரை ரிங்ரோட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கீழடி அருங்காட்சியகம். செட்டிநாட்டு கலாச்சார பாணியில் கட்டப்பட்டு உள்ள அருட்காட்சியகம் புதிய சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

மதுரைக்கு தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருப்பரங்குன்றம் ஆலயம். முருகப்பெருமானின் முதல் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்குதான் முருகப்பெருமான் தெய்வானையை திருமணம் புரிந்தார் என புராண கதைகள் சொல்கின்றன.
மதுரையில் இருந்து 30 கிலோமீட்டர் தூரம் சென்றால், குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி உங்களை வரவேற்கும். இந்த அருவி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியில் உள்ளது. இங்குள்ள அருவியில் நீராடி மகிழ அற்புதமான இடம். ஒத்தக்கடை நரசிம்மர் கோவில், சமணர் குகை கோவில்கள் என இன்னும் எத்தனையோ இடங்கள் மதுரையை சுற்றிலும் உள்ளன. சித்திரை திருவிழாவை பார்க்க உடனே டிக்கெட் போடுங்க..அருமையான இடங்களையும் கண் குளிர ரசிக்கலாம்.












Click it and Unblock the Notifications