ரஜினியை முன்வைத்து அழகிரி போட்ட கணக்கு டமால்.. அதிர்வலைகள் இல்லாமல் போன மதுரை மீட்டிங்
மதுரை: மதுரையில் ஆதரவாளர்கள் கூட்டத்தை அழகிரி ஏற்பாடு செய்திருந்த போதும் அரசியல் களத்தில் பெரிய அதிர்வலைகள் ஏதும் இல்லாமலேயே முடிந்து போய்விட்டது.
நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 31-ந் தேதி கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 3-ல் மதுரையில் ஆதரவாளர்கள் கூட்டத்தை அழகிரி கூட்டுவதாக அறிவித்தார். ஆனால் திடீரென ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவே இல்லை என அறிவித்துவிட்டார்.
இதனால் எடுத்த எடுப்பிலேயே மதுரையில் அழகிரி கூட்டிய ஆதரவாளர்கள் கூட்டத்துக்கான எதிர்பார்ப்பும் அடங்கிப் போனது. இதனையும் மீறி திமுகவில் நீண்டகாலமாக ஒதுங்கி இருக்கும் ஆதரவாளர்கள் மதுரையில் அழகிரி கூட்டத்தில் பங்கேற்றனர்.
மு.க.ஸ்டாலினுக்கு எதிரான மு.க. அழகிரி பேச்சு.. தூக்கி வைத்து கொண்டாடும் அதிமுக-பாஜக
திமுகவில் ஒதுங்கியவர்கள்
மதுரை கூட்டம் தொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர்கள், அழகிரியின் கூட்டத்துக்கு 7,000 பேர் முதல் 8,000 பேர் வரை வந்தனர். இவர்களில் கணிசமானவர்கள் குறிப்பாக அழகிரியுடன் மேடையில் இருந்தவர்கள் அனைவரும் அவரால் ஆதாயம் அடைந்தவர்கள். பெரும்பாலானோர் திமுகவில் பதவி கிடைக்காமல் வெறுப்பில் ஒதுங்கி இருந்தவர்கள்.
திமுக 2-ம் கட்ட தலைவர்கள்
அதிமுக, திமுக இரண்டிலும் கட்சி பதவி கிடைக்காமல் புழுக்கத்தில் இருப்பவர்கள் எப்போதும் இருக்கவே செய்வார்கள். ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய போது கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் போன்ற ஓரம்கட்டப்பட்ட 2-ம் தலைவர்கள் கூட போனார்கள். ஆனாலும் மதுரையில் அப்படி சொல்லிக் கொள்ளும்படியான 2-ம் கட்ட திமுக தலைவர்கள் கூட வரவில்லை என சுட்டிக்காட்டுகின்றனர்.
திமுகவுக்கு சேதாரம் இல்லை
மேலும் அழகிரி கூட்டிய கூட்டமானது திமுகவுக்கு எந்த வகையிலும் சேதாரத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்காது. மதுரையிலேயே அழகிரி தரப்பு திமுகவுக்கு வராமல் இருந்தாலே போதும்.. அந்த கட்சிக்கு இயல்பாக கிடைக்கும் ஓட்டுகள் தானாக வந்து சேரும். அழகிரி தரப்பு மீது படிந்திருக்கும் அடாவடி இமேஜ் மதுரை மக்களிடம் குறிப்பாக வர்த்தகர்களிடம் இன்னமும் அகலவே இல்லை. ஆகையால் திமுக கூட்டணிக்கு இந்த கூட்டம் எந்த சேதாரத்தையும் ஏற்படுத்திவிடாது என்கின்றனர்.
குடும்ப பிரச்சனையை பேசிய அழகிரி
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சுட்டிக்காட்டியதை போல, குடும்ப விவகாரங்களைப் பற்றி பேசத்தான் மதுரை கூட்டத்தை அழகிரி பயன்படுத்திக் கொண்டார். மேலும் ரஜினிகாந்த் ஆதரவு இல்லாமல் தம்மால் தனித்து எந்த அசைவையும் திமுகவில் ஏற்படுத்திவிட முடியாது என்பதை சென்னையில் கருணாநிதிக்கான அஞ்சலி பேரணியின் போது தெளிவாக உணர்ந்து கொண்டவர் அழகிரி. அதனால் லோக்சபா தேர்தலில் கூட கட்சியினரை மறைமுகமாக வேறு கட்சிகளுக்கு வாக்களியுங்கள் என சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டார் எனவும் குறிப்பிடுகின்றனர்.
அதிர்வலைகள் இருக்காது
அழகிரியின் பேச்சை அதிமுக, பாஜக மகிழ்ச்சியுடன் பார்க்கலாம். ஆனால் அழகிரி தொடர்ச்சியான அரசியல் நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுக்க சாத்தியமே இல்லை என்கின்றனர். ஏனெனில் அழகிரி லோக்சபா எம்.பி.யாக, மத்திய அமைச்சராக இருந்த போது எதையும் அவர் செய்யவும் இல்லை என்பதைவிட லோக்சபா விவாதங்களில் கூட பங்கேற்காதவர்; கூட்டங்களுக்கே போகாதவர்; அமைச்சரவை முடிவுகளை கூட அறிவிக்காதவர் என ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கியவர். அவரால் அதிகபட்சம் குடும்ப பிரச்சனையை தவிர வேறு எதனையும் பேசவே முடியாது. இது திமுகவினரை எந்த வகையிலும் ஒருபோதும் பாதிக்காது எனவும் கோடிட்டும் காட்டுகின்றனர்.