லோக்சபா தேர்தலில் மோடி தமிழகத்தில் போட்டி?.. கூடவே அமித்ஷாவுமா? எந்த தொகுதி? அர்ஜுன் சம்பத் சூசகம்
மதுரை: பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் தமிழகத்தில் போட்டியிடுவார்கள் என இந்து முன்னணி அமைப்பின் தலைவர் அர்ஜுன் சம்பத் சூசகமாக தெரிவித்துள்ளார்.
வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்த நிலையில் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள போராடி வருகிறது. ஆனால் பாஜகவோ 2024 இல் வெற்றி பெற்றால் அதை ஹாட் டிரிக் வெற்றியாக கொண்டாட முடிவு செய்துள்ளது.
இந்த தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த ராகுல் காந்தி முயற்சித்து வருகிிறார். இதற்காக தேசிய ஒற்றுமை யாத்திரையை நடத்தி வருகிறார்.

மதுரை
இந்த நிலையில் மதுரையில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத், பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கி புத்தகத்தை வெளியிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில் மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களை தமிழில் தொகுத்து புத்தகமாக தமிழக மக்கள் அறியும் விதத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மின் கட்டண உயர்வு
மின் கட்டண உயர்வு மற்றும் மின் இணைப்பு கட்டணம் உயர்வை கண்டித்தும் இந்து மக்கள் கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். ஏற்கெனவே அறிவித்த மாதந்தோறும் மின் கணக்கீடு திட்டத்தை செயல்படுத்துவதாக கூறிய தேர்தல் அறிக்கை என்னவாயிற்று, அறிவிக்கப்படாத மின்வெட்டால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

அவதூறு
தற்போது குறிப்பாக இலவச திட்டங்கள் மூலம் பொதுமக்கள் வீடுகளில் அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. மின் வாரியம் ஊழல் வாரியமாக மாறியுள்ளது. ஆவின் பால் பொருட்கள் விலை மற்றும் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஆ ராசா இந்து மக்களுக்கு எதிராக அவதூறு பேச வைத்து திசை திருப்பும் வேலையை திமுக செய்து வருகிறது .

ஆ ராசாவை ஸ்டாலின் நீக்க வேண்டும்
ஆ ராசாவை திமுக தலைவர் ஸ்டாலின் நீக்கி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்பேத்கர் கொள்கை வழியில் பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்களையும் குருவிக்காரர்களையும் சேர்த்து அரசின் உயரிய பதவிகளில் பழங்குடியினர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவாக திமுக செயல்பட்டு வருகிறது.

மோடிக்கு நெருக்கமானவர்கள்
பிரிவினைவாத சக்திகளளுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியும் அமித்ஷாவும் வரும் தேர்தலிில் தமிழகத்தில் குறிப்பாக ராமேஸ்வரத்தில் போட்டியிட கோரிக்கை விடுக்கிறேன். பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள் என்பது இடதுசாரி கட்சிகளின் பொய் பிரச்சாரம் ஆகும் என அர்ஜுன் சம்பத் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications