தேவர் சிலை தங்க கவசம் யாருக்கு? திண்டுக்கல் சீனிவாசன் தாக்கல் செய்த மனு.. இன்று முக்கிய விசாரணை!
மதுரை: முத்துராமலிங்கத் தேவர் தங்க கவசம் தொடர்பாக அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தாக்கல் செய்துள்ள மனு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எழுந்த மோதல், பல மாதங்களாக தொடர்ந்து வருகிறது. நீதிமன்ற வழக்குகள், தொண்டர்களின் ஆதரவு என்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் அடுத்தடுத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு தங்க கவசம் அணிவிக்கும் அதிகாரம் தொடர்பாக இரு தரப்பும் முட்டிமோதி வருகிறது. அதிமுக சார்பாக வழங்கப்பட்ட தங்க கவசத்தை தங்கள் தரப்புக்கு தரக் கோரி இரு தரப்பினரும் வங்கியில் கடிதம் அளித்துள்ளனர்.

13 கிலோ தங்க கவசம்
இந்த நிலையில் வங்கியில் இருந்து தேவரின் தங்கக்கவசத்தை பெறும் அதிகாரம் எனக்கே உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு 2014ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 13 கிலோ தங்க கவசத்தை வழங்கினார்.

நடைமுறை என்ன?
இந்த தங்கக் கவசம் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கியில் அதிமுக மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலயம் பெயரில் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொருளாளரும் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலய பொறுப்பாளர்களும் வங்கியில் கையெழுத்திட்டு தங்க கவசத்தினை பெற்றுச்செல்வார்கள்.

திண்டுக்கல் சீனிவாசன் மனு
தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தங்கக்கவசத்தினை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவரை கட்சியில் இருந்து நீக்கிய உத்தரவு செல்லும் என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கி உள்ளன. எனவே, தற்போதைய அதிமுக பொருளாளராக உள்ள எனக்கே தங்கக்கவசத்தினை வங்கியில் இருந்து பெறுவதற்கான அதிகாரம் உள்ளது. ஆனால், வங்கி அதிகாரிகள் எங்களிடம் தங்கக்கவசத்தினை ஒப்படைக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இன்று விசாரணை
எனவே வரும் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த நாளை முன்னிட்டு தங்கக்கவசத்தினை நாங்கள் எடுத்துச் செல்ல சட்டபூர்வமாக இடைக்கால உத்தரவு வழங்கவும், வங்கி கணக்கை அ.தி.மு.க. சார்பாக உபயோகப்படுத்தும் அதிகாரத்தை வழங்க வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிடவும் வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார். அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனின் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு இன்று விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications