அச்சச்சோ.. இப்படி அவசரப்பட்டு வேலையை விட்டுட்டீங்களே அண்ணாமலை.. சீமான் கலாய்
மதுரை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவசரப்பட்டு ஐபிஎஸ் வேலையை விட்டு வந்துவிட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கனமழைக்கு நடுவே நடைபெற்ற இந்த கூட்டத்தில், மழையையும் பொருட்படுத்தாமல் கட்சியினரோடு மழையில் நனைந்தபடி சீமான் அமர்ந்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து மேடையில் பேசிய சீமான், குடிவாரி கணக்கெடுப்புதான் சாதி ஒழிப்பிற்கான முயற்சி. சாதிவாரி கணக்கெடுப்பும், மொழி்வாரி கணக்கெடுப்பும் எடுக்க வேண்டும், குடிவாரி கணக்கெடுத்து இட ஒதுக்கீடு வழங்குங்கள்.

வடமாநிலத்தவர் ஆக்கிரமிப்பு
வந்தவரை எல்லாம் வாழ வைத்தவர்கள் தமிழர்கள் என்ற வார்த்தையில் தமிழர்கள் விழுந்துவிட்டனர். அதில் இருந்து இன்னும் எழாமல் இருப்பதால் தான் அனைத்து மாநிலத்தினரும் தமிழகத்தை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டனர். வடமாநிலத்தவர்கள் தமிழகத்திற்கு படை எடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களை போல் சாமியை காக்க அரசியல் செய்யவில்லை. பூமியை காக்க அரசியல் செய்கிறோம் என்று தெரிவித்தார்.

அண்ணாமலைக்கு பதிலடி
தொடர்ந்து சீமானிடம் என்ன கேள்வி கேட்டாலும் பதில் கூறுகிறார், அவர் என்ன ஞானியா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்கிறார். அறிவது அறிவு. உணர்வது ஞானம். நான் அனைத்தையும் உணர்வேன். என்னிடம் அனைத்திற்கும் பதில் இருக்கிறது. அதனால் கேள்வி கேட்பவர்களுக்கு பதில் அளிக்கிறேன். அண்ணாமலையிடம் பதில் இல்லை. அதனால் அவர் அமைதியாக இருக்கிறார்.

அண்ணாமலை அவசரப்பட்டுவிட்டார்
நாடு முன்னேறுகிறது என மோடி பேசும் பொய்யை விட திமுகவினர் பேசும் சமூகநீதி என்பது பெரிய பொய். ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை எனக் கூறும் அண்ணாமலை, மோடி 8 ஆண்டாக எதுவும் செய்யவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். பல புத்தகங்களை எழுதியவர்கள் எல்லாம் அமைதியாக இருக்கின்றனர். ஆனால், 20 ஆயிரம் புத்தகங்களை படித்ததாக கூறும், அண்ணாமலை அவ்வாறு இருக்க மறுக்கிறார். அவசரப்பட்டு ஐபிஎஸ் வேலையை அண்ணாமலை விட்டு வந்துவிட்டார்.

எச்.ராஜாவுக்கு பதிலடி
ஆனால் இரண்டு ஆண்டுகளில் அண்ணாமலையை பாஜகவினர் விரட்டிவிடுவார்கள். ஏற்கனவே இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் இப்போது என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அண்ணாமலையிடம் தயவுசெய்து கேட்கிறேன், எச்.ராஜாவிற்கு ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆளுநர் பதவி வாங்கிக் கொடுத்துவிடுங்கள். தமிழிசை செளந்தரராஜனுக்கு, ஆளுநர் பதவி வழங்கியதுபோல், எச்.ராஜாவுக்கும் ஆளுநர் பதவி வழங்க வேண்டும். ஆளுநர் பதவிக்காகத்தான் அவர் இப்படி பேசி வருகிறார் என்று விமர்சித்தார்.

ராஜராஜ சோழன் விவகாரம்
பின்னர், ராஜராஜ சோழன் காலத்தில் இந்தியாவும் இல்லை, இந்து மதமும் இல்லை. வரலாற்றில் ராஜராஜ சோழன் சைவ மரபினர் என்றே உள்ளது. வீர சைவரான எங்களை ஏன் இந்து என மதம் மாற்றுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இல்லாவிட்டால் சமூக நீதி என்று பேசுவதை நிறுத்த வேண்டும். இனியும் ஏமாற தமிழக மக்கள் தயாராக இல்லை என்று ஆவேசமாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications