தமிழகத்தில் 10 பேர் உள்பட நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 106 பேர் கைது
டெல்லி: இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (Popular Front of India) அமைப்பினருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் மட்டும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இந்தியா என்பது இந்தியாவில் செயல்படும் ஒரு இஸ்லாமிய அமைப்பாகும். கேரளம், தமிழகத்தில் இந்த அமைப்பை தடை செய்யக் கோரி இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் நீதிமன்றங்கள் மறுத்துவிட்டன.
இந்த நிலையில் தமிழகத்தில் பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இந்தியா இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், கோவை, தென்காசி, சென்னை உள்ளிட்ட இடங்களில் ஃபாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவுக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

திண்டுக்கல்
திண்டுக்கல் பேகம்பூரில் என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இங்கு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. அது போல் மதுரை பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடந்தது. பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டுதல், பயிற்சி முகாம் நடத்துதல், தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆட்களை சேர்த்தல் உள்ளிட்ட புகார்களின் பேரில் ரெய்டு நடந்தது.

ராமநாதபுரம்
அது போல் ராமநாதபுரத்தில் வாலிநோக்கத்தில் எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் பராகத்துல்லா வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் கோரிப்பாளையம், வில்லாபுரம், நெல்பேட்டை, யாகப்பா நகர் அந்த அமைப்பினரின் வீடுகள், அலுவலகங்களில் அதிகாலை முதல் சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவுக்கு சொந்தமான தலைமை அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

நெல்லை மாவட்டம்
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் உள்ள மதரஸாவில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அது போல் தென்காசி மாவட்டத்தில் பண்பொழியில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகி முகமது அலி ஜின்னா வீட்டிலும் சோதனை நடந்தது. மதுரை மாவட்டம் நெல்பேட்டையில் பிஎஃப்ஐ தேசிய செயற்குழு உறுப்பினர் யூசூப் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

தேனி மாவட்டம்
தேனி வீரபாண்டி அருகே முத்துதேவன்பட்டி, கம்பம் பகுதியில் நிர்வாகி யாசர் வீட்டிலும் சோதனை நடந்தது. கோவையில் நடந்த சோதனையில் செயற்குழு உறுப்பினர் இஸ்மாயிலை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றனர். இதே போல் கேரளா மாநிலத்திலும் பிஎஃப்ஐ அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது.

106 பேர் கைது
இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் நடந்த சோதனையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 106 பேர் கைது செய்யப்பட்டனர். தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத் துறையுடன் இணைந்து போலீஸார் அந்த அமைப்பின் நிர்வாகிகளை கைது செய்துள்ளனர். கேரளாவில் 22 பேரும், கர்நாடகா 20 பேரும், மகாராஷ்டிரா 20 பேரும், ; தமிழகத்தில் 10 பேரும், ஆந்திராவில் 5 பேரும், அஸ்ஸாமில் 9 பேரும் , புதுவையில் 3 பேரும், ராஜஸ்தானில் 2 பேரும் உத்தரப்பிரதேசத்தில் 8 பேரும் என பாப்புலர் ஃபிரண்ட் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications