அதிகாலையிலேயே அதிர்ந்த மதுரை.. திடுதிப்பென வந்த என்ஐஏ! பெரியார் பேருந்து நிலையம் அருகே ரெய்டு
மதுரை: தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள வீட்டில் இன்று அதிகாலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் பல்வேறு மாவட்டங்களில் திடீர் சோதனை மேற்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று மதுரையில் என்.ஐ.ஏ. திடீர் சோதனையில் அதிகாலை முதல் ஈடுபட்டு வருகிறது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்து உள்ளது காசிமார் தெரு. மதுரையின் முக்கிய வீதிகளில் ஒன்றான இங்கு வசிக்கும் முஹம்மது தாஜுத்தீன் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிகாலையிலேயே அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முஹம்மது தாஜுத்தீன் பல மாதங்களாக தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படும் நிலையில் அவரது சகோதரர் உஸ்மான் என்பவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். போலி பாஸ்போர்ட் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முஹம்மது தாஜுத்தீன் மாதக்கணக்கில் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவரது சகோதரர் வீட்டில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

லக்னோ, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் வழக்கு தொடர்பாகவும் இந்த சோதனை நடத்தப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் இவருக்கு தொடர்புடையதாகவும் கூறப்படுகிறது. மதுரை மாநகர போலீசாரும் சோதனையில் ஈடுபட்டு வரும் என்.ஐ.ஏ. அதிகாரிகளுடன் உள்ளார்கள். இதன் காரணமாக மதுரையின் மிக முக்கிய வீதியான காசிமார் தெரு முழுக்க முழுக்க போலீசார் மற்றும் என்.ஐ.ஏ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதுவரை நடத்தப்பட்ட தீவிர சோதனையில் எந்தவிதமான ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை.












Click it and Unblock the Notifications