இனி கபடி கபடி இல்லை! மோடி கபடிதான்! பட்டுனு சொன்ன சீனிவாசன்! டக்குனு திரும்பி பார்த்த அண்ணாமலை! கலகல
மதுரை: மோடி லீக் கபடிப் போட்டியின் இறுதிப் போட்டிகள் நடைபெற்ற நிலையில், இதில் சீனிவாசன் பேசிய பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப். 17ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு இந்தியா முழுக்க பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
அதேபோல தமிழ்நாட்டில் பிரதமர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் மோடி லீக் கபடிப் போட்டிகள் நடத்தப்பட்டன. சென்னை, சேலம், கோவை, திருச்சி என 60 இடங்களில் இந்தப் போட்டிகள் நடந்தன.
மோடி கபடி லீக் - மயிலாடுதுறையில் கபடி பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் - அண்ணாமலை
மோடி கபடி லீக்
இறுதிச் சுற்றுப் போட்டிகள் மதுரையில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இறுதிப் போட்டிகள் நேற்று நடந்தது. இதில் சேலம் கிழக்கு மற்றும் சேலம் மேற்கு அணிகள் மோதியன. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்த இந்தப் போட்டியில் 29-32 என்ற புள்ளி அடிப்படையில் சேலம் கிழக்கு அணி வெற்றி பெற்று முதல் பரிசை வென்றது. இரண்டாம் பரிசை சேலம் மேற்கு அணியும், மூன்றாம் பரிசை திருநெல்வேலி அணியும் பெற்றன.
பரிசுத் தொகை
இந்தப் போட்டியில் வென்ற சேலம் கிழக்கு அணிக்கு ரூ. 15 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. சேலம் மேற்கு அணிக்கு 10 லட்சம் ரூபாயும், திருநெல்வேலி அணிக்கு மூன்றாவது பரிசாக ரூ.5 லட்சமும் வழங்கப்பட்டது. மேலும், இதில் தலைசிறந்த கபடிப் போட்டிகளுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இதில் பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன், பாஜக இளைஞர் நலன் விளையாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத்ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.
அண்ணாமலை
இதில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "மோடி கபடி லீக் அடுத்தாண்டும் நடைபெறும். அடுத்தாண்டு தஞ்சையில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதில் வென்றவர்களுக்கு முதல் பரிசாக 30 லட்ச ரூபாய் கொடுக்க உள்ளோம். இந்தாண்டு மோடி கபடி லீக் போட்டியில் 60 ஆயிரம் வீரர்கள் கலந்து கொண்டனர். அடுத்தாண்டு இதில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
மிகச் சிறப்பு
இதில் பங்கேற்பவரை இந்திய அணியில் இடம் பெற வைக்கவும் தேவையான முயற்சிகளைச் செய்வோம். மயிலாடுதுறையில் கபடிப் போட்டிக்கான உயர்தர பயிற்சி மையத்தைக் கொண்டு வர நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். ஒரு விளையாட்டுப் போட்டியை எப்படி நடத்த வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணம் இந்த மோடி கபடி லீக். அந்தளவுக்கு இதை மிகச் சிறப்பாக நடத்தி உள்ளோம்.
சரித்திர மோடி
மோடி கபடி லீக் சரித்திர போட்டியாக நடந்து உள்ளது. அடுத்தாண்டு வரலாற்றிலேயே இடம் பெறும் வகையில் போட்டியை நடத்துவோம்.. வெல்லும் அணி அடுத்தகட்டத்திற்குச் செல்லவே பரிசுகளை வழங்குகிறோம். இந்த போட்டியை மிகச் சிறப்பாக நடத்தி, வெற்றி பெற வைத்ததற்கு மதுரை மக்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
மோடி கபடி
இதற்கு முன் மைக்கை பிடித்த பாஜக மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன் பேசுகையில், "கபடிப் போட்டி நியாயமாக நடைபெற்றுள்ளது, மோடி கபடி என்பது புதிய வார்த்தையாக மாறியுள்ளது.. உயர்தர பயிற்சி நிறுவனம் மயிலாடுதுறையில் வர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறேன்.. இனிமேல் தமிழகத்தில் கபடி விளையாடும் போது கபடி கபடி என்று உச்சரிப்பதற்குப் பதிலாக மோடி கபடி, மோடி கபடி என்று உச்சரித்துத் தான் விளையாடுவார்கள்" என்றார்.