மதுரை எய்ம்ஸ் விவகாரம்.. மாணவர்களால் பார்க்க முடியாத ஒரே கல்லூரி.. கொதிக்கும் சு.வெங்கடேசன்!
மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடர்பாக மத்திய அரசுக்கு 17 முறை அழுத்தம் கொடுக்கப்பட்டும், மத்திய அரசு மக்களுக்கு அநீதியை செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு மத்திய அரசின் நிர்வாக குழப்பங்கள் தான் மதுரை எய்ம்ஸ் பணிகள் தாமதமாகி வருவதாக தெரிவித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தாமதமானதை கண்டித்தும், வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நாளை மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறுகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2018 டிசம்பரில் அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து அறிவிக்கப்பட்ட தொகை ரூ.1,264 கோடி ஆகும்.

என்ன சிக்கல்?
பின்னர் 150 படுக்கை கொண்ட புதிய பிரிவை உருவாக்குவதற்காக மறுமதிப்பீடு செய்து ரூ.1,977 கோடியாக நிதி உயர்த்தப்பட்டது. அப்படியெனில், ஒரு படுக்கைக்கு 4.74 கோடி ரூபாயா?, இதில் 1,627 கோடி ரூபாயை ஜெய்கா நிறுவனம் கடனாக வழங்கும் நிலையில், வெறும் 350 கோடியை ஒதுக்குவதில் என்ன சிக்கல்? மத்திய அரசின் அலட்சிய போக்கும், நிர்வாக குழப்பமும்தான் இதற்கு காரணம்.

17 முறை அழுத்தம்
தமிழ்நாட்டிற்கான திட்டங்களை பாரபட்சத்துடன் பார்ப்பதும், மக்களை வஞ்சிக்கும் அரசியலின் ஒரு பகுதியாகவுமே இதை பார்க்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்தை தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்கு 17 முறை அழுத்தம் கொடுக்கப்பட்டு உள்ளது. இருந்தும் மக்களுக்கான அநீதியை மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தற்போது 2.5 கோடி மதிப்பில் நிர்வாக கட்டிடம் கட்டப்படும் என அறிவித்திருப்பதும் கண்துடைப்புதான்.

நிர்வாக குழப்பம்
மத்திய அரசின் நிர்வாக குழப்பங்களால் தான் ஜெய்கா நிறுவனம் வழங்க வேண்டிய கடன் தொகையை கூட இதுவரை வழங்காமல் உள்ளது. ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 2026ல் பட்டம் பெற்று வெளியேறும் போது கூட அவர்கள் பயின்ற கல்லூரியை அவர்களால் பார்க்க முடியாது. தாம் பயின்ற கல்லூரியையே காணாமல் பட்டம் பெற்று வெளியேறுபவர்கள் மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் மட்டும்தான்.

நாளை போராட்டம்
பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தொகையை முழுமையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 10,000 பேர் பங்கேற்கும் மாபெரும் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில், 3 எம்பி-க்கள் மற்றும் தோழமை கட்சியினர் பங்கேற்பில் நடைபெறவுள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications