நேரா ரூமுக்கு போன மோடி.. கடைசி வரை முயன்ற ஓபிஎஸ், எடப்பாடி.. க்ளியரா சொன்ன அதிகாரிகள்! கப்சிப்!
மதுரை : ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் ஒன்றாக அழைத்து பிரதமர் மோடி வரவேற்பை ஏற்றுக்கொண்ட நிலையில், அவரை விமான நிலைய ஓய்வறையில் இருந்து வரும்போது சந்திக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி சென்ற ஓய்வறையை நோக்கி எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சென்ற நிலையில், பிரதமர் மோடியின் பாதுகாப்பு அதிகாரிகள் வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்று இருவரிடமும் தெரிவித்துள்ளனர்.
இதனால், இருவருமே ஏமாற்றத்தோடு திரும்பி ஹோட்டலில் சென்று தங்கிவிட்டு மீண்டும், பிரதமர் மோடி திரும்பி வரும்போது விமான நிலையம் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்றாக அருகருகே நின்று
பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராம பல்கலைக்கழக விழாவில் கலந்துகொண்டார். மதுரை விமான நிலையத்துக்கு தனி விமானத்தில் வந்த பிரதமர் நரேந்திர மோடியை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் வரவேற்றனர். இருவரும் தள்ளித் தள்ளி நின்ற நிலையில் அருகருகே அழைத்து, அவர்களின் பூங்கொத்துகளை வாங்கியுள்ளார் மோடி. பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தை முடித்துக்கொண்டு திரும்புகையிலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் ஒன்றாக வழியனுப்பி வைத்துள்ளனர்.

இரட்டைக்குழல் துப்பாக்கி
பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் அருகருகே வைத்துக்கொண்டு, இருவரிடம் இருந்து ரோஜாப்பூக்களைப் பெற்று, இணைந்து செயல்படுமாறு குறிப்பால் உணர்த்தி இருப்பதால் பிரிந்து கிடக்கும் ஈபிஎஸ், ஈபிஎஸ் மீண்டும் இரட்டை குழல் துப்பாக்கியாய் ஒன்றிணைந்து செயல்பட போகின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸையும், தன்னையும் மோடி ஈக்குவலாக டீல் செய்ததால் கடுகடுப்போடு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஓய்வறையில் மோடி
வரவேற்பை ஏற்றபிறகு பிரதமர் மோடி விமான நிலையத்தின் ஓய்வறைக்கு சென்றுள்ளார். அவர் ஓய்வறையில் இருந்து திரும்ப வரும்போது பிரதமர் மோடியுடன் சில வார்த்தைகள் பேசலாம் என்று எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அந்த அறையை நோக்கி சென்றுள்ளனர். அப்போது விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் இங்கு இருக்கக் கூடாது. பிரதமர் வெளியே வரும்போது, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே இங்கு இருக்கலாம் என்று கூறி வெளியேறும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

அனுமதிக்காத அதிகாரிகள்
அதிகாரிகள் அங்கு நிற்க அனுமதிக்காததால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் விமான நிலையத்தில் இருந்து வெளியேறி, மோடி வருவதற்கு முன்பு தாங்கள் தங்கி இருந்த ஹோட்டல்களிலேயே சென்று தங்கி உள்ளனர். பின்னர் பிரதமர் மோடி திண்டுக்கல் காந்திகிராமத்தில் இருந்து மதுரை விமான நிலையம் வந்து விசாகப்பட்டினத்துக்கு புறப்படும் போது அதேபோல் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் வரிசையில் அருகருகே நின்று வழியனுப்பியுள்ளனர்.

கவனித்த பிரதமர்
வரவேற்கும்போது தள்ளித் தள்ளி நின்றவர்களை தான் அருகே அழைத்த நிலையில், திரும்பிச் செல்லும்போது அவர்கள் தாங்களாகவே அருகருகே நின்றதை பிரதமர் மோடி கவனித்துள்ளார். இப்போதாவது தங்களிடம் பிரதமர் சில நிமிடங்கள் பேசுவார் என்று இருவருமே எதிர்பார்த்து நின்ற நிலையில், எதுவுமே சொல்லாமல் பிரதமர் மோடி கடந்து சென்றுள்ளார். 'இணைந்து இருப்பதுதான் உங்களுக்கு பலம்' என உணர்த்திவிட்டதால் மோடி வேறு எதுவும் பேசவில்லை என்கிறார்கள் பாஜக வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications