சமூக போராளி ஸ்டேன் சாமி திருச்சாம்பலுக்கு மதுரையில் பொதுமக்கள் அஞ்சலி - வீர வணக்கம்
சமூக செயற்பாட்டாளர், பாதிரியார் ஸ்டேன் சாமியின் எரியூட்டப்பட்ட உடலின் திருச்சாம்பலுக்கு மதுரை தூய மரியன்னை பேராலயத்தில் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மதுரை: பழங்குடியின மக்களின் வாழ்க்கைக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்து உயிர்நீர்த்த சமூக செயற்பாட்டாளர், பாதிரியார் ஸ்டேன் சாமியின் எரியூட்டப்பட்ட உடலின் திருச்சாம்பலானது பேழையில் வைக்கப்பட்டு, மதுரை தூய மரியன்னை பேராலயத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 1937ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி பிறந்தவர் ஸ்டேன் சுவாமி. ஸ்டானிஸ்லாஸ் லூர்துசாமி என்பதுதான் அவரது இயற்பெயர். காலப் போக்கில் அது ஸ்டேன் சுவாமியாக மாறியது. ஸ்டேன் சாமி என்று அழைப்போரும் உண்டு.

செயின்ட் ஜோஜப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார் ஸ்டேன் சாமி. பள்ளி நாட்களிலேயே, பாதிரியார் ஒருவரோடு ஏற்பட்ட பழக்கத்தால் சமூக தொண்டுகளில் ஈடுபடுவதில் ஆர்வம் ஏற்பட்டது.
கடந்த 70 வருடங்களாக அந்த பிராந்திய ஆதிவாசி மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த சமூக செயற்பாட்டாளர், பாதிரியார், ஸ்டேன் சுவாமி கடந்த 2020ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 8ம் தேதி இரவு என்.ஐ.ஏ போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

83 வயதான ஸ்டேன் சுவாமி, தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டார். 2018ம் ஆண்டு மகாராஷ்டிராவின், பீமா - கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாகவும் வரிசையாக குற்றங்கள் சுமத்தப்பட்டன.
சிறையில் உடல்நிலை மோசமானதை அடுத்து இவர் கடந்த சில வாரமாக தீவிரமாக சிகிச்சை பெற்று வந்தார். ஜாமீன் கிடைக்காத நிலையில் கடந்த 6ஆம் தேதி மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

ஸ்டேன் சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டு அவரது அஸ்தி தமிழகத்தில் உள்ள பேராலயங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. சென்னை லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த ஸ்டேன் சுவாமியின் அஸ்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மாநிலம் முழுவதும் ஸ்டேன் சாமியின் அஸ்தி கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்று காலை 7.00 மணியளவில் ஸ்டேன் சாமியின் திருச்சாம்பலானது பேழையில் வைக்கப்பட்டு, மதுரை தூய மரியன்னை பேராலயத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அதன் பின்பு மனித உரிமைக் காப்பாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் மாலை 4.00 மணியளவில் தூய மரியன்னை பேராலய வளாகத்திற்குள் செயற்படும் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு மனித உரிமைச் செயற்பாட்டாளர்களால் கொண்டு வரப்பட்டு, அனைத்து அரசியல் கட்சியினர், இயக்கங்கள், சங்கங்களின் பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், அருட்சகோதரிகள், மதுரை உயர்மறைமாவட்ட அருட்தந்தையர்கள், குடிமைச் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் வீரவணக்க அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மாலை 5.00 மணியளவில் மதுரை உயர்மறைமாவட்ட பேராயர் மேதகு அந்தோணி பாப்புசாமி அவர்களின் தலைமையிலும், தூய மரியன்னை பேராலய அதிபர் அருட்பணி மரியநாதன் அவர்கள் முன்னிலையிலும் வீரவணக்க அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இவ்வீரவணக்க அஞ்சலி நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சி மற்றும் இயக்கங்களைச் சார்ந்தோர் உரையாற்றினர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளரும், தீர்மானக்குழுச் செயலாளருமாகிய பொன்.முத்து ராமலிங்கம், மதுரை தெற்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலக்குழுவின் மாநில துணைத் தலைவர் தோழர் நன்மாறன், மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன், மக்கள் விடுதலைக் கட்சித் தலைவர் முருகவேல் ராஜன் உள்ளிட்டோர் பேசினர்.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சார்ந்த தோழர் பொன்னுத்தாய், மதுரை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் தலைவர் லியாகத் அலி, தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், ஆதித்தமிழர் கட்சித் தலைவர் கு. ஜக்கையன், அமலோற்பவ மாதா கன்னியர் சபையின் தலைவர் அருட்சகோதரி ரஞ்சிதம் மற்றும் இறுதியாக மதுரை உயர்மறைமாவட்ட பேராயர் முனைவர் அந்தோணி பாப்புசாமி அவர்களும் வீரவணக்க அஞ்சலி உரை நிகழ்த்தினர்.












Click it and Unblock the Notifications