“EPS வேணாம்னு போனீங்கள்ல.. இப்ப UPS-க்கு அலையுறீங்க”.. மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய ராஜேந்திரபாலாஜி!
மதுரை: "இ.பி.எஸ் ஆட்சியை வேண்டாம் என்று சொன்ன மக்கள், இப்போது யூ.பி.எஸ் தேடி அலைகிறார்கள்" என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விமர்சித்துள்ளார்.
ஆவின் ஊழல், சொத்துக்குவிப்பு புகார் என அடுத்தடுத்து சிக்கி, தலைமறைவு, கைது, ஜாமீன் என அரசியல் களத்தை பரபரப்பாக்கிவிட்டு, சில வாரங்களாக அமைதியாக இருந்த முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் லைம்லைட்டுக்கு வரத் தொடங்கியுள்ளார்.

கடும் விமர்சனம்
அ.தி.மு.க அமைப்புத் தேர்தலையொட்டி கடந்த வாரம் விருதுநகரில் நடைபெற்ற ஆலோசனைக் கூடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார் ராஜேந்திரபாலாஜி. இந்நிலையில் இப்போது மீண்டும் தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார் ராஜேந்திரபாலாஜி. சிவகாசியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பேசினார்.

குண்டக்க மண்டக்க பேசுவேன்
இந்தக் கூட்டத்தில் ராஜேந்திரபாலாஜி பேசுகையில், "நான் குண்டக்க மண்டக்கத்தான் பேசுவேன், ஆனால் உண்மைய பேசுவேன். தேனிக்கு போன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கிட்ட மின்சாரத்தை காணோம்னு மக்கள் புகார் சொல்றாங்க. தி.மு.க ஆட்சியில மட்டுந்தான் மின் கம்பியில் அணில் நின்னா மின்சாரம் தடைபடுது. மக்கள்தான் புலம்புறாங்க. இபிஎஸ் ஆட்சியை வேண்டாம்னு சொன்ன மக்கள் இப்ப யூபிஎஸ் தேடி அலையுறாங்க. தி.மு.க எப்ப ஆட்சிக்கு வந்ததாலும் மின்வெட்டுதான்.

நிலவரம் கலவரம்
தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒரு வருஷம் கூட முழுசா முடியல. அதுக்குள்ள தமிழகத்தோட நிலவரம் கலவரமா இருக்கு. தி.மு.க ஆட்சியை மக்கள் விரும்பல. என்ன ஆட்சி இது? எந்தப் பக்கம் பார்த்தாலும் பிரச்சனை. அடுத்தவங்க மேல பழிபோட்டு அவங்கள பிடிச்சு உள்ளே போடறதுல காட்டுற கவனத்தை, இந்த ஆட்சியாளர்கள் மக்கள் நலனில் காட்டணும். இல்லைன்னா, வர்ற தேர்தல்ல தி.மு.க மோசமா தோற்கும். உள்ளாட்சித் தேர்தல்ல தி.மு.க எப்படி ஜெயிச்சிச்சுன்னு ஊரு உலகத்துக்கே தெரியும். சட்டமன்றத் தேர்தல்ல அது முடியாது.

வாக்கு வங்கியே கிடையாது
தி.மு.கவுக்கு வாக்கு வங்கியே கிடையாது. அ.தி.மு.கவுல ஏதாவது பிரச்சனைன்னாதான் தி.மு.க ஆட்சிக்கு வரும். அ.தி.மு.க ஆட்சி விரைவில் மலரும். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும், அடுத்து வரப்போற சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க வெற்றி பெறும்" எனப் பேசியுள்ளார்.

அ.தி.மு.கவினர் உற்சாகம்
அமைதியாக இருந்துவந்த ராஜேந்திரபாலாஜி, மீண்டும் அதிரடியாகப் பேசி வருவது விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தைக் கூட்டியுள்ளது. அதேநேரம், தி.மு.கவினர், இந்தப் பேச்சால் கொந்தளித்துப் போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications