தென்மேற்குப் பருவமழையும் குற்றால அருவிகளும் - தென்னகத்து ஸ்பாவில் குளிப்பது தனி சுகம்
தென்மேற்குப் பருவமழை கேரளாவில் ஜோராக ஆரம்பித்து விட்டது. படிப்படியாக மழை அதிகரிக்கும் போது குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிக்கும். மருத்துவ குணம் கொண்ட இந்த அருவி தண்ணீரில் குளிப்பது போல ஆனந்தம் வேறு எதுவும் கிடையாது.
மதுரை: வெயிலடித்தாலும் உரைக்காமல் சில்லென்று வீசும் காற்று... அவ்வப்போது பன்னீர் தூவலாக வந்து செல்லும் சாரல் மழை இதுவே குற்றால சீசனை நினைவூட்டும். கேரளாவில் தென்மேற்குப் பருவமழை ஆரம்பித்த சில நாட்களிலேயே குற்றாலத்தில் சீசன் ஆரம்பித்து விடும். அருவியில் குளிக்க செல்வதே ஆனந்தம்தான். தென்னகத்தின் ஸ்பா என்று அன்போடு அழைக்கப்படும் குற்றால அருவிகளில் குளித்தாலே உடல் வலி எல்லாம் பறந்தோடும் மனதும் உற்சாகமாக இருக்கும்.
இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஆரம்பித்து விட்டது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினாலும் தடை உத்தரவு உள்ளதால் அருவியை நேரில் சென்று கூட பார்க்க முடியாமல் போய் விட்டது.
இதமான சாரல்
இதமான வெயில்... சிலு சிலுவென பூவாய் தூரல் விழும் போது உச்சந்தலையில் எண்ணெய் வைத்துக்கொண்டு கடை வீதிகளில் பேசிக்கொண்டே நடந்து சென்று குளிப்பது ஒரு இதம். அந்த சுகத்தை அனுபவிக்க ஆண்டுதோறும் குற்றாலத்திற்கு கிளம்பி விடுவது வழக்கம். மக்கள் அதிகம் குளிப்பது மெயின் அருவியும், பழைய குற்றாலமும், ஐந்தருவிகளும்தான்.
உடம்புக்கு இதமாக
மூலிகை வனத்திற்கு இடையே ஓடி வரும் தண்ணீர் பொங்கி பிரவாகமாக அருவியாக கொட்டுகிறது. அந்த மூலிகைத் தண்ணீரில் குளித்தாலே நோய்கள் நீங்கி விடும். மனதில் உள்ள அழுத்தங்கள் நீங்கி உற்சாகம் பிறக்கும். இதற்காகவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான சீசன் காலத்தில் குற்றாலத்திற்குப் படையெடுப்பார்கள்.
அருவி குளியலும் குற்றால நாதர் தரிசனமும்
குற்றால அருவிகளில் பெருகி வரும் நீரில் குளித்து விட்டு குற்றாலநாதரை தரிசிப்பது சிறப்பானது. இது சக்தி பீடங்களில் ஒன்றாக திகழ்கிறது. ஈசனுக்கு இங்கு தினமும் காலையில் தைல அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அபிஷேக தைலம் பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. வாதநோய், வாத வலி, உடல் வலி, முதுகு வலி, தீராத தலைவலி, வயிற்று வலி, கண் வலி உள்ளவர்கள், இதனை தடவி வந்தால் சுகம் பெறலாம்.
சுடச்சுட சிப்ஸ்
அருவியில் ஆனந்தமாக குளியல் போட்ட பின்னர் சுடச்சுட டீயும் வடையும் சாப்பிடுவது அலாதியான சுகம். நேந்திரங்காய் சிப்ஸ் சுடச்சுட போட்டு எடுத்த உடன் அதையும் கையில் அள்ளி சாப்பிடுவது ஆனந்தம். விதம் விதமான பழங்கள் கடை வீதிகளில் குவிந்து கிடக்க ரம்புட்டான் பழத்தின் நிறமே சாப்பிட தூண்டும்.
பரோட்டாவும் சிக்கனும்
செங்கோட்டை பார்டர் பரோட்டா கடைகளில் சுடச்சுட பரோட்டாவும் பிச்சிப்போட்ட நாட்டுக்கோழி சிக்கன்,வறுத்த சிக்கன் வைத்து கார சாரமாக சால்னா ஊற்றி சாப்பிட்டால்தான் குற்றாலம் போன திருப்தியே கிடைக்கும். போன வருடம் சீசன் காலத்தில் குற்றாலத்திற்கு போக முடியாவிட்டாலும் இந்த வருடமாவது சீசனை அனுபவிக்க முடியுமா என்ற ஏக்கம் என்னைப்போன்ற அருவிப்பிரியர்களுக்கு வரத்தான் செய்கிறது.
தென்னகத்து ஸ்பாவில் தலையை நனைக்க முடியுமா பார்க்கலாம்.