ஜெ. புகைப்படத்தை சட்டையில் வைத்துக் கொண்டு செல்பவர்களை சிறைக்கு அனுப்புவோம்.. ஸ்டாலின்
மதுரை: ஜெயலலிதா புகைப்படத்தை சட்டைப்பையில் வைத்துக் கொண்டு செல்பவர்களை சிறைக்கு அனுப்புவோம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த கூத்தியார்குண்டில் தொகுதி வாக்கு சாவடி முகவர் கூட்டத்தில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
மு.க.ஸ்டாலின் பேச்சிலிருந்து... உங்களை உற்சாகபடுத்தி நாங்களும் ஊக்கமும் உற்சாகமும் பெற நான் இங்கு வந்துள்ளேன். தமிழகதில் எங்கெங்கு இடைதேர்தல் நடைபெற வாய்புள்ளதோ அங்கு ஊராட்சி சபை கூட்டத்தை நடத்தி, வாக்கு சாவடி முகவர்கள்கூட்டத்தை நடத்தி வருகின்றேன். மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனதை வெல்வோம் என்ற முழக்கத்துடன் பயணத்தை துவங்கியுள்ளோம். இந்த ஆட்சியை அப்புறப்படுத்த நம்மைவிட மக்கள் ஆர்வமாக உள்ளனர். திமுக 1957 ல் அண்ணா தலைமையில் முதலில் போட்டியிட்டோம். பக்தவாச்சலத்திடம் பத்திக்கையாளர்கள் கேட்டதற்கு அண்ணாவிற்கு வாழ்த்து கூறினார்.
கலைஞர் ஆற்றிய பணி
திமுகவினர் டீ குடித்துகொண்டே தேர்தல் பணியாற்றி திமுக வெற்றி பெற செய்தனர் என்பது வரலாறு. அதற்காக நீங்கள் டீ மட்டும் தானா என நினைத்துவிட வேண்டாம். கலைஞர் ஆற்றிய பணியை இனி யாராலும் செய்ய முடியாது. அதன் பின் அந்த பொறுப்புகளை நான் ஏற்று செய்து வந்தேன். தலைவர் கலைஞர் இல்லாவிட்டாலும் அந்த பணியை நான் செய்து வருகின்றேன். இவ்வளவு பெரிய கட்சியில் பிரச்சனை இருக்கும். ஒரு குடும்பத்தில் பிரச்சனை வந்தால் பெரியவர்கள் பேசி சரி செய்வது போல், கலைஞர் இருந்த போது ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு செய்து மாவட்ட, நகர , ஒன்றிய நிர்வாகிகளை அழைத்து பேசி சமரசம் செய்து வைப்பார்கள். நான் செயல்தலைவர் ஆனவுடன் ஊராட்சி அளவில் உள்ள நிர்வாகிகளை அழைத்து பேசினேன். ஒன்றிய கழகத்துடன் ஊராட்சி நிர்வாகிகளுக்கு தொடர்பு இருக்க வேண்டும். ஆனால் இன்று அதிகமான இடங்களில் தொடர்பு இல்லாமல் உள்ளது.
பறவையின் கழுத்து
தலைமை சொல்லும் பணிகளை மாவட்ட நிர்வாகி மூலமாக , நகர , ஒன்றிய நிர்வாகிகள் மூலம் ஊராட்சி நிர்வாகிகள் தான் அந்த பணியை செய்கின்றனர். அந்த ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் வாக்கு முகவர்களுக்கும் உரிய மரியாதை தரப்படும். அர்ஜூனனுக்கு பறவையின் கழுத்து எப்படி தெரிகின்றதோ, அது போல் உங்களுக்கு திமுக மற்றும் கலைஞர் தான் தெரிய வேண்டும். அண்ணனுக்கு பக்கத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் தம்பியிடம் நமது வெற்றியை போய் வைக்க வேண்டும். அதிமுகவிற்கும் , திமுகவிற்கும் ஒரு சதவிகிதம் மட்டுமே வித்தியாசம் இருந்தது. இதனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். ஆட்சிக்கு வந்தவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு கோடிக்கு இட்லி சாப்பிட்டார் , டீ குடித்தார். நான் கிண்டலுக்கு சொல்லவில்லை வேதனையில் சொல்கிறேன். ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின் சசிகலா சிறைக்கு சென்றதால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வந்துள்ளார்.
சிறையில் அடைப்போம்
பதவி கிடைக்கும் வரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு சிபிஐ விசாரணை கேட்ட ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் வந்தவுடன் அதைப்பற்றி பேசவில்லை , தற்போது சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சிபிஐ விசாரணை கேட்கின்றார். உங்கள் நண்பர்கள் , உறவினர்களாக உள்ள அதிமுககாரர்களிடம் சொல்லுங்க, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணம் குறித்து கண்டறிந்து அவர்களை சிறையில் அடைப்போம் என்று. ஜெயலலிதாவிற்கும் நமக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும் என சொல்லுங்கள், மக்களிடம் இவற்றை எடுத்து சொல்ல வேண்டும்.
நீதிமன்றம் சென்று நீதி
மெரினாவில் கலைஞரை அடக்கம் செய்ய இடம் தருவதற்காக எடப்பாடி பழனிச்சாமி கையை பிடித்து கேட்டேன் .அப்படி கேட்டும் திட்டவட்டமாக மறுத்தனர். அதன் பின் நீதிமன்றம் சென்று நீதியை பெற்றுள்ளோம். இது கலைஞருக்கு கிடைத்த பெருமை இல்லை. தொண்டன், ஒட்டுமொத்த தமிழனுக்கு கிடைத்த பெருமை. கலைஞர் புகழ் அஞ்சலிக்கு பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷாவை அழைத்தோம். அவர் வரமுடியாததால் நிதின் கட்கரி வந்தார். ராகுல்காந்திக்கு பெயருக்கு சொன்னோம். எந்த விளம்பரமும் இல்லாமல் வந்து சென்றார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணையை திமுக நடத்தி தற்போது ஜெயலலிதா புகைப்படத்தை சட்டை பையில் வைத்துகொண்டு செல்பவர்களை சிறைக்கு அனுப்புவோம் என்றார் ஸ்டாலின்