அவங்களும் ஒத்துழைப்பு கொடுக்கலை... இவங்களும் திரும்பி பார்க்கலை - காலங்கடந்து யோசிக்கும் டாக்டர்
வந்ததும் சரியில்லை வாச்சதும் சரியில்லை என்கிற கதையாகி விட்டது மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் சரவணன் கதை. பாஜகவினர் ஒத்துழைப்பு துளி கூட கிடைக்காமல் தனிமரமாகி விட்டாராம்.
மதுரை: சட்டசபைத் தேர்தல் களம் படு பரபரப்பாகவே இருக்கிறது. "காத்திருந்தவன் மனைவியை நேத்து வந்தவன் கொண்டு போயிட்டான்" என்று கிராமங்களில் சொலவடை சொல்வார்கள். அந்த மாதிரி மதுரை வடக்குத் தொகுதிக்காக காத்திருந்தார் பாஜக மாநில செயலாளர், அவருக்கு தொகுதியை ஒதுக்காமல் கட்சி மாறி வந்த டாக்டர் சரவணனுக்கு ஒதுக்கியதால் பலரும் பாராமுகமாக இருக்கின்றனராம். இதனால் தனிமரமாக தவித்து வருகிறாராம் டாக்டர் வேட்பாளர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. சட்டசபைத் தேர்தல் களத்தில் பல சுவாரஸ்யமான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. கட்சி மாறி வந்த சில நிமிடங்களிலேயே வேட்பாளராக அறிவிக்கப்பட்ட காட்சிகளும் அரங்கேறின.
டாக்டர் சரவணன் திமுகவில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த சில மணி நேரங்களிலேயே அவருக்கு சீட் கொடுக்கப்பட்டது சொந்தக்கட்சியினருக்கும் பிடிக்கவில்லை கூட்டணி கட்சியினரும் அதை ரசிக்கவில்லையாம். பலகட்சி மாறி பயணித்த சரவணன் என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்து வருகிறாராம்.
கட்சி மாறி பயணித்த சரவணன்
மதுரையில் பிரபலமான சரவணா மருத்துவமனையின் தலைவரான இவர், ஆரம்பத்தில் மு.க.அழகிரி ஆதரவாளராகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர் பிறகு மதிமுகவில் இணைந்தார். மதுரை புறநகர் மாவட்டச் செயலாளராக சில காலம் இருந்த சரவணன் 2015ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். 2016ஆம் ஆண்டு ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார்.
கைரேகை சர்ச்சை வழக்கு
மருத்துவ அணி மாநில துணைச் செயலாளாராக பொறுப்பு வழங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டதால், 2017ஆம் ஆண்டு நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஏ.கே.போஸிடம் தோல்வி அடைந்தார். அந்தத் தேர்தலின்போதுதான் அதிமுக வேட்பாளரின் சான்றிதழில் ஜெயலலிதா வைத்த கைரேகை சர்ச்சையானது. அதை நீதிமன்றம் வரை கொண்டு சென்று ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்பதை வெளிப்படுத்தினார்.
இடைத்தேர்தலில் வெற்றி
அதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ஏகே.போஸ் மரணமடைய 2019ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டு வெற்றி பெற்றார் டாக்டர் சரவணன். திருப்பரங்குன்றம் தொகுதியை ஆளும் அரசு புறக்கணித்ததால் இவர் சொந்தப் பணத்தை செலவு செய்து நலத்திட்டங்களை செய்தார். கட்சியில் இவரது வளர்ச்சியும் செல்வாக்கும் திமுகவில் பழம் தின்று கொட்டை போட்ட மதுரை மாவட்டச் செயலாளர் கோ.தளபதி, புறநகர் மாவட்டச் செயலாளர் பி.மூர்த்திக்கும் பிடிக்காமல் போகவே முட்டல் மோதல் ஏற்பட்டது.
திமுகவில் சீட் இல்லை
திருப்பரங்குன்றம் தொகுதி சிபிஎம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியானார் டாக்டர் சரவணன். சிட்டிங் எம்எல்ஏவான தனக்கு மதுரையில் ஏதாவது ஒரு தொகுதி ஒதுக்குவார்கள் என்று எதிர்பார்த்தார் ஆனால் வேட்பாளர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை.
பாஜகவிற்கு தாவிய சரவணன்
திமுகவில் இடம் இல்லாவிட்டால் பாஜகவில் இடம் கொடுப்பார்கள் என்று நம்பி பாஜகவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்து 4 மணிநேரத்தில் அவருக்கு மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட சீட் கொடுத்தது பாஜக. பல கட்சிகள் மாறி வந்த சரவணனுக்கு சீட் கொடுத்ததால் மதுரை வடக்குத் தொகுதி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏமாற்றத்தில் கட்சிக்காரர்கள்
மதுரை வடக்குத் தொகுதிக்காக குறி வைத்து காத்திருந்தார் ஒரு பேராசிரியர். அந்த தொகுதி தனக்குத்தான் என்று நம்பியிருந்தவருக்கு சரவணனுக்கு சீட் ஒதுக்கியதால் கடும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தார். இதனால் சரவணனுக்கு பாஜகவினர் யாரும் சரியான ஒத்துழைப்பு கொடுக்காமல் தவிர்த்து விடுகின்றனராம்.
கோபத்திற்கு காரணம்
ஜெயலலிதாவின் கைரேகை மீது சந்தேகத்தை எழுப்பி கேஸ் போட்டவர் சரவணன். அதனால் அதிமுகவினர் அனைவரும் சரவணன் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். அதிமுகவை நேசிக்கும் இரட்டை இலையை சுவாசிக்கும் யாரும் சரவணனுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்று பகிரங்கமாக கூறி வருகின்றனர் அதிமுக தொண்டர்கள்.
யாருடைய ஆதரவும் இல்லையே
திமுகவில் தளபதியை எதிர்த்து களம் காணும் சரவணன், சொந்த கட்சியான பாஜகவினர் ஆதரவும் இல்லாமல் கூட்டணி கட்சியினரான அதிமுகவினரின் ஒத்துழைப்பும் கிடைக்காமல் தனிமரமாக தவித்து வருகிறார். அவரசப்பட்டு கட்சி மாறிட்டோமே என்று இப்போது யோசிக்கிறாராம். காலங்கடந்து யோசித்து என்ன பயன் என்று கேட்கின்றனர் சரவணனின் ஆதரவாளர்கள்.