தமிழ், சமஸ்கிருதத்தில் தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு.. தமிழில் நடத்த கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
மதுரை: தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் ஆலயத்தில் (பிரகதீஸ்வரர் ஆலயம்) தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் திருக்குடமுழுக்கு நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது. அத்துடன் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது.
தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் ஆலயத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக பெரிய கோயிலில் பராமரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அத்துடன் குடமுழுக்கிற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
இந்நிலையில் தஞ்சை பெருவுடையார் ஆலயத்தில் குடமுழுக்கை தமிழில் மந்திரங்கள் ஓதி தான் நடத்த வேண்டும் என்று கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜி திருமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

சமஸ்கிருதத்திலும்
இந்த வழக்கின் விசாரணையின் போது கோயில் நிர்வாகம் சார்பில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் சார்பில் அதன் துணை ஆணையர் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய இருமொழிகளிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு தகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் எல்லா இடங்களிலும் திருமுறைகள் ஓதப்படுமென்றும் கோயில் நிர்வாகம் தனது மனுவில் கூறியது.

திருமுறை ஓதப்படும்
கடந்த காலங்களில் கும்பாபிஷேகம் நடந்தபோது, யாரும் பிரச்சனை செய்யவில்லை என்றும் கோயிலின் நடைமுறை அறியாதவர்களே இதுபோல சலசலப்பை ஏற்படுத்துகிறார்கள் என்றும் பெருவுடையார் கோவிலில் நடக்கும் எல்லா பூஜைகளும் திருமுறையும் திருவிசைப்பாவும் இசைத்தே நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

12 திருமுறை பாடல்கள்
திருக்குடமுழுக்கு நடக்கும்போது, 12 திருமுறைகளிலும் இருந்து பாடல்கள் பாடப்படும் என்றும் யாக சாலையில் மட்டுமல்ல, மகாகுடமுழுக்கு நடைபெறும்போதும் இவை பாடப்படும் என்றும் அதனால், மனுதாரர் இது குறித்து பிரச்சனை எழுப்ப வேண்டியதில்லை என்றும் குடமுழுக்கு நிகழ்வில் தமிழுக்கு பிரதானமான இடம் தரப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

எப்படி நடக்க போகுது
மேலும் அந்த மனுவில் பிப்ரவரி ஒன்றாம் தேதியிலிருந்து ஐந்தாம் தேதிவரை யாக சாலையில் பூஜைகள் நடக்கும்போது 13 ஓதுவார்கள் திருமுறைகளைப் படிப்பார்கள் என்றும் இந்த நாட்களில் நடராஜர் மண்டபத்தில் திருமுறை பண்ணிசை அகண்ட பாராயணம் செய்ய 35 ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிப்ரவரி ஐந்தாம் தேதியன்று திருமுறை பாராயணத்தை ஓதுவார்களும் குழந்தைகளும் பாடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மனு தள்ளுபடி
இதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. அதன்படி தஞ்சை பெருவுடையார் ஆலயத்தில் ) தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் திருக்குடமுழுக்கு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. அத்துடன் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது.












Click it and Unblock the Notifications