Karur Tragedy: சிபிஐ விசாரணை கோரிய ஆதவ் அர்ஜுனா மனு.. அக்டோபர் 3 இல் விசாரணை
மதுரை: கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிபிஐ விசாரணை வேண்டும் என்று தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பரப்புரையில் விஜயை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் குழந்தைகள், பெண்கள் என 41 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் திட்டமிட்ட சதி என்று தவெகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி அருணா ஜெகதீசன் கரூரில் ஆய்வு நடத்தி, விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, கரூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார். தவெக தலைவர் விஜயோ, தவெக நிர்வாகிகளோ இதுவரை பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கவில்லை.
இந்நிலையில் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கூட்ட நெரிசல் சம்பவத்தில் உள்ளூர் அரசியல்வாதிக்கு தொடர்பு இருப்பதாக மதுரை ஐகோர்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஆதவ் அர்ஜுனா மனுவில் கூறியிருப்பதாவது:-
கரூரில் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உள்ளூர் அரசியல்வாதிக்கு தொடர்பு இருக்கிறது. செந்தில் பாலாஜி குறித்து பேசியபோது மின் தடை செய்யப்பட்டது. செருப்பு, கற்கள் வீசப்பட்டன. திடீரென அப்பாவி மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டன. மக்கள் மீது தடியடி நடத்த என்ன காரணம்.
சம்பவம் நடைபெறுவதற்கு முன்பே மருத்துவமனைகள் தயார் நிலையில் இருந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்திக்க சென்ற என்னை அனுமதிக்கவில்லை. கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா மனுவில் கூறியுள்ளார். தற்போது நீதிமன்றம் தசரா விடுமுறையில் இருப்பதால் இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் 3 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications