மாற்றம்! தேவர் ஜெயந்திக்கு போஸ்டர் அடித்த தேவேந்திர குல வேளாளர்கள்! அசத்தும் தென்மாவட்ட அரசியல் களம்
மதுரை: தேவர் ஜெயந்தி நிகழ்வுக்கு இதுவரை இல்லாத வகையில் தேவேந்திர குல வேளாளர் சம்மூகத்தினர் நட்புறவு அடிப்படையில் சுவரொட்டிகள் அடித்து ஒட்டியிருப்பது தென் தமிழகத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தென் தமிழகத்தில் கணிசமான வாக்கு வங்கிகளாக இருக்கும் தேவர், தேவேந்திரகுல வேளாளர் சமூகங்களிடையேயான பகமை நீண்டகாலமாக இருந்தது. இம்மானுவேல் சேகரன், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் காலம் தொடங்கி இரு சமூகங்கள் தங்களை பரமவைரிகளாக வரித்துக் கொண்ட காலம் தமிழக சரித்திரத்தின் கறுப்பு பக்கங்கள்தான்.
இதனால் தென் தமிழகம் அமைதியை தொலைத்தது. இரு சமூகத்து இளைஞர்கள் எதிர்காலத்தை இழந்தனர். இத்தகைய தொடர் துயரங்கள் ஒருபுறம் இருக்க.. இந்த பிளவுகளின் நிழலில் அரசியல் கட்சிகள் வாக்கு வேட்டையாடி அறுவடை செய்தும் கொண்டிருந்தன.
மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்! மத்திய அரசுக்கு வைரமுத்து வேண்டுகோள்!
சமூகங்களிடையே நல்லுறவு
கடந்த சில ஆண்டுகளாக இரு சமூகங்களிடையேயான முரண்கள் மெல்ல மெல்ல தளர்ந்து நட்புறவு சமூகமாக இணக்கத்தை காட்டுகிற போக்கு உருவாகி இருக்கிறது. தென் தமிழகத்தில் நிகழ்ந்திருக்கும் ஆக்கப்பூர்வமான இந்த மாற்றம் அண்மையில் இமானுவேல் சேகரன் குருபூஜையின் போதும் வெளிப்பட்டது. தற்போதைய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையின் போதும் வெளிப்பட்டிருக்கிறது.
நல்லிணக்க போஸ்டர்கள்
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர், பசும்பொன் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பரமக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல இடங்களில் போஸ்டர் ஒட்டி நல்லிணக்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இந்த போஸ்டர்களில் இமானுவேல் சேகரன், பசும் பொன் முத்துராமலிங்க தேவர் இருவரது படங்களுமே இணைந்தே இடம்பெற்றிருக்கின்றன. இதேபோல மருது சகோதரர்கள் குருபூஜைக்கும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் நல்லுறவு சுவரொட்டி அடித்து ஒட்டி இருந்தனர்.
அரசியல் களம்
தென் தமிழகத்தில் இருபெரும் சமூகங்கள் இயல்பாக தங்களது பகைமை மறந்து நட்புறவை வலுப்படுத்தி வருவது மிக மிக ஆரோக்கியமான முக்கியமான மாற்றமாகும். இந்த மாற்றம், இதுவரையிலான தென் தமிழக தேர்தல் களத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சாத்தியங்களை மறுத்துவிட முடியாது.
என்னவாகும் தேர்தல் களம்?
தேவர் சமூகத்தினரைப் பொறுத்தவரை வன்னியருக்கு உள் இடஒதுக்கீடு கொடுத்ததை மிக கடுமையாக எதிர்த்தது. சட்டசபை தேர்தலின் போது, பொதுவான அதிமுக வாக்கு வங்கியாக இருந்த தேவர் சமூகம் இம்முறை இந்த உள் இடஒதுக்கீட்டு விவகாரத்தால் அதிமுகவுக்கு தக்க பதிலடி கொடுத்தது. அதாவது இப்போது அதிமுகவுக்கு எதிராக நிற்கிறது; தேவேந்திரகுல வேளாளர்களைப் பொறுத்தவரை எஸ்சி பட்டியல் நீக்கம் என்பது மிக முக்கியமான கோரிக்கை. அதற்கு சாதகமான நிலையில் மத்திய அரசும் பாஜகவும் இருக்கிறது.. இந்த இரு பெரு சமூகங்களும் திராவிட கட்சிகளின் பிடிகளில் இருந்து விடுபட்டு வெகுதொலைவில் நிற்பதாக ஒரு தோற்றம் உள்ளது. இது திராவிட கட்சிகளின் வாக்கு வங்கிக்கு பெரும் சம்மட்டி அடியாகக் கூடிய வாய்ப்புகள் உண்டு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.