"என்னை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க" தவெக குறித்த கேள்வி.. சிரித்துக்கொண்டே பதிலளித்த ஓபிஎஸ்!
மதுரை: தவெக தொடர்பான கேள்விக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், என்னை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க என்று பதில் அளித்துள்ளார். ஓபிஎஸ் தனது அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கை தொடர்பாக டிசம்பர் 24ஆம் தேதி அறிவிக்க உள்ள நிலையில், விஜய்யுடன் கூட்டணி அமைப்பாரா என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் விஜய் பேசுகையில், அண்ணாவும், எம்ஜிஆர்-ம் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களை பயன்படுத்துவதை பற்றி யாரும் புகார் சொல்லக்கூடாது. நாங்கள் ஒருவழியில் அரசியல் செய்துகிட்டு போகிறோம். நீங்கள் புலம்பி தள்ளுறீங்க.. இது எப்படி இருக்கு தெரியுமா? எனக்கு பயம் இல்லை என்று கத்திகிட்டே பயந்து ஓடும் சிறுவன் மாதிரி இருக்கு..

முதலில் மண்டை மேல இருக்க கொண்டைய மறைங்க.. அதேபோல் களத்திலேயே இல்லாதவங்களையும் களத்திற்கும் அவர்களுக்கும் சம்மந்தமே இல்லாதவர்களையும் தவெக எதிர்க்கப் போவதில்லை. நீங்கள் கேட்குறீங்க என்பதற்காக எல்லாம் எதிர்க்க முடியாது. எங்களுக்கு நிறையா வேலை இருக்கு. எம்ஜிஆர், ஜெயலலிதா சொல்லியதை போல் திமுக ஒரு தீயசக்தி என்று ஆவேசமாக பேசினார்.
விஜய்யின் இந்த பேச்சு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் புதிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் பேச்சின் நிறைவில், செங்கோட்டையன் போல் இன்னும் ஏராளமானோர் வரவிருக்கிறார்கள். அப்படி வருவோருக்கு சரியான மரியாதை அளிக்கப்படும் என்று தெரிவித்தார். இதனால் அதிமுகவில் சீட் கிடைக்காதவர்கள், அதிருப்தியில் உள்ளவர்கள் பலரும் தேர்தல் நேரத்தில் விஜய் பக்கம் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்த போது தவெக தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் தவெக திணறுகிறதே என்ற கேள்விக்கு, என்னை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க.. என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்தார். தொடர்ந்து செங்கோட்டையன் இணைந்திருப்பது தவெகவுக்கு பலம் என்கிறார்களே என்ற கேள்விக்கு, "இருக்கட்டும்" என்றார்.
தொடர்ந்து தவெகவில் இன்னும் பலரும் சேரவிருப்பதாக சொல்கிறார்களே என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்றார். சில நாட்களுக்கு முன்பாக ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் தவெகவில் இணைய இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் வைத்திலிங்கம் மறுத்திருந்தார். தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் கூட இல்லாத நிலையில், ஓபிஎஸ் டிசம்பர் 24ஆம் தேதி தனது முடிவை அறிவிக்க உள்ளார்.
என்டிஏ கூட்டணியில் ஓபிஎஸ்ஸை சேர்க்க எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், ஓபிஎஸ் முன் இருக்கும் முதல் வாய்ப்பாக விஜய் இருக்கிறார். அதேபோல் திமுக பக்கமும் ஓபிஎஸ் பேசி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் என்ன முடிவை ஓபிஎஸ் எடுப்பார் என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications