பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, முக அழகிரியை சந்திப்பாரா.. எல் முருகன் சொன்ன பதில்!
மதுரை: பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மதுரைக்கு வந்துள்ள நிலையில், மு.க.அழகிரியை சந்தித்துப் பேசுவாரா என்பது குறித்த கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பதிலளித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று இரவு தனிவிமானம் மூலம் தமிழகம் வந்தார். மதுரைக்கு வந்த அவர், தனியார் விடுதியில் தங்கி உள்ளார். இன்று காலை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஜே.பி. நட்டா மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் ஜே.பி. நட்டா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். மதியம் தமிழக பா.ஜ.க.மையக் குழு உறுப்பினர்களின் கூட்டத்தில் பங்கேற்று கலந்துரையாடுகிறார்.
அப்போது சட்டமன்ற தேர்தலில் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது குறித்து அவர் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. அதன்பின்னர் பா.ஜ.க.வில் இணைந்த மற்ற கட்சி நிர்வாகிகளுடன் அவர் மதிய விருந்தில் பங்கேற்கிறார்.பின்னர் மாலையில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். அதனை தொடர்ந்து மதுரை ரீங்ரோடு அம்மா திடலில் நடக்கும் பா.ஜ.க. தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
நிதி நிர்வாகம்
இந்நிலையில் மதுரைக்கு வந்த ஜேபி நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியார்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல் முருகனிடம் கடந்த ஏழு வருடமாக இந்தியாவின் நிதிநிலை அதல பாதாளத்திற்குத் தள்ளியதுதான் பாஜகவின் சாதனை என ப. சிதம்பரம் சொல்கிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு முருகன், சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த காலத்தை காட்டிலும், தற்போது பாஜக ஆட்சிகாலத்தில் சிறப்பான முறையில் நிதி நிர்வாகம் செயல்படுகிறது என்று பதில் அளித்தார்.
வேளாண் சட்டம்
வேளாண் சட்டங்களை முழுமையாக படித்து விட்டால் நாடே பற்றி எரியும் என ராகுல் காந்தி கூறுகிறாரே என்ற கேள்விக்கு, ராகுல் காந்தி வேளாண் சட்டத்தை முழுமையாக படிக்காததையே இது காட்டுகிறது. அதனை முழுமையாக படித்தவர்கள் வேளாண் சட்டத்தினை ஆதரிக்கிறார்கள். அதனை படிக்காதவர்களே ஏற்க மறுக்கிறார்கள் என்றார்.
வாய்ப்பு இல்லை
தமிழகத்திற்கு வந்துள்ள ஜேபி நட்டா மு.க.அழகிரியை சந்திக்க வாய்ப்பிருப்பதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு, ஜேபி நட்டா தமிழகத்திற்கு வருகை புரிவது எங்கள் கட்சியின் அமைப்பு சார்பாக நடைபெறும் கூட்டம் மற்றும் ஆலோசனைகளில் பங்கேற்பதற்கு மட்டுமே, எந்த அரசியல் நோக்கம் எதுவும் இல்லை என்றார்.
41 சீட்டுகள்
சட்டமன்ற தேர்தலில் தேமுதிக 41 சீட்டு கோரிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த எல்.முருகன், கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை முடிந்த பிறகே அதனை பற்றி கூற முடியம் என்றார். இதன் மூலம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் அதிமுக வட்டாரத்தில் நிறைவு பெறவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இப்போதைக்கு பாஜக அதிமுக கூட்டணி மட்டும உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏனெனில் ஏற்கனவே ராமதாஸ் கூட்டணி குறித்து உறுதியான நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை. தேமுதிகவும் இன்று கூட்டத்திற்கு பின் அறிவிப்பதாக கூறியிருக்கிறது.