தென்கிழக்கு அரபிக் கடலில் உருவானது டவ்-தே புயல்; மே 18-ல் குஜராத் அருகே கரையை கடக்கும்
மங்களூர்: தென்கிழக்கு அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது டவ்- தே புயலாக இன்று உருவானது. இந்த புயல் மே 18-ந் தேதியன்று குஜராத் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக உருமாறியது. இந்த புயலுக்கு டவ்-தே என ஏற்கனவே பெயரிடப்பட்டுள்ளது.

டவ்-தே புயலின் தாக்கம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களில் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டிருந்தது. திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பிற்பகல் முதலே சூறைகாற்றும் இரவில் மழையும் பெய்தது.
கேரளாவின் இடுக்கி. காசர்கோடு, கோழிக்கோடு. வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்திருக்கிறது. இந்த 5 மாவட்டங்களிலும் 5 மாவட்டங்களில் 204 மி மீ மழை பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.

கோட்டயம், எர்ணாகுளம், திரிசூர், மலப்புரம், பாலக்காடு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 115 மி.மீ. மழைக்கு வாய்ப்பு உள்ளதாம். டவ்-தே புயல் உருவாகி உள்ளதால் மீனவர்கள் அரபிக் கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் புயல் மீட்புப் பணிகளுக்காக 5 மாநிலங்களுக்கு 53 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே கேரளாவில் கனமழை கொட்டி தீர்க்கிறது. இதனால் பல பகுதிகளில் கடல் நீர், மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications