மெஸ்ஸி- எம்பாப்வே டி ஷர்ட் அணிந்து மாலை மாற்றிய மணமக்கள்..கேரளாவில் ரசிக்க வைத்த திருமணம்
திருவனந்தபுரம்: உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டம் நடந்த அதே நாளில் கேரளாவின் கொச்சியில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இதில் மணமக்கள் மெஸ்ஸி- எம்பாப்வே டி ஷர்ட்களை அணிந்தபடி திருமணம் செய்து கொண்டது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து திருவிழா உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு கால்பந்து ஜூரத்தையே கொடுத்து விட்டது என்று சொல்லலாம்.
அந்த அளவுக்கு கடந்த ஒரு மாத காலமாக கால்பந்து தொடர்பான பேச்சுக்களும் நட்சத்திர வீரர்கள் அடித்த கோல்களையும் பற்றி பேச்சும்தான் வலம் வந்தது.

36 ஆண்டுகளுக்கு பிறகு வென்றது..
கால்பந்து போட்டி முடிந்த இரண்டு தினங்கள் ஆகிவிட்ட நிலையிலும் கூட அது பற்றிய பேச்சுக்கள் இன்னும் குறைந்தபாடில்லை. சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து உலக கோப்பையை அர்ஜெண்டினா 36 ஆண்டுகளுக்கு பிறகு வென்றது குறித்த பேச்சுக்கள்தான் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்சி மற்றும் பிரான்சின் எம்பப்வே குறித்து ரசிகர்கள் தொடர்ந்து சிலாகித்து வருகின்றனர்.

பிடித்தமான அணியின் ஜெர்சி..
இந்தியாவில் கிரிக்கெட் அளவுக்கு கால்பந்து பிரபலம் இல்லை என்றாலும் கேரளாவில் கால்பந்து போட்டிகளுக்கு தனி வரவேற்பு உள்ளது. கேரளாவில் கால்பந்து போட்டிகள் தொடங்கியதில் இருந்தே ரசிகர்கள் பலரும் மெஸ்சியின் பெயர் பொறித்த ஜெர்சிக்களை அணிந்த படி உலா வந்ததை காண முடிந்தது. இந்த நிலையில், கேரளாவின் ஒரு படிமேலே போய் திருமண நிகழ்ச்சியில் மணமக்கள் தங்களுக்கு பிடித்தமான அணியின் ஜெர்சி அணிந்துள்ளனர். இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

டி-ஷர்ட்களை அணிந்த மணக்கள்
மணமகன் அர்ஜெண்டினாவுக்கு ஆதரவாக மெஸ்ஸின் 10 எண் கொண்ட ஜெர்சியும் மணப்பெண் பிரான்சுக்கு ஆதரவாக எம்பாப்வே டி ஷர்ட்டையும் அணிந்து இருந்தார். திருமணத்தின் போது அணியப்படும் பாரம்பரிய உடைகளுக்கு மேலே இந்த டி ஷர்ட்களை மணக்கள் அணிந்து இருந்தனர். கொச்சியில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. உலக கோப்பை இறுதிப்போட்டி நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக இந்த திருமணம் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சீக்கிரமாக முடித்துக்கொண்ட இந்த மண தம்பதிகள் , கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தை பார்ப்பதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள தங்கள் வீட்டிற்கு சுமார் 206 கி.மீட்டர் பயணித்தார்களாம்.

தம்பதிக்கு பலரும் வாழ்த்து
கால்பந்து மீதான தங்கள் பிரியத்தை திருமண நிகழ்ச்சியின் போது வெளிகாட்டி மணமக்கள் குறித்து அப்பகுதி மக்கள் சுவாரசியமாக பேசிக்கொண்டனர். கால்பந்து ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் இந்த தம்பதிகளுக்கு தங்கள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். கத்தாரின் தோஹா நகரில் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற கால்பந்து இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா- ஸ்பெயின் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணி கோப்பையை வென்றது.












Click it and Unblock the Notifications