பப்ஜிக்கு அடிமை: அம்மாவின் அக்கவுண்டில் ரூ.10 லட்சம் களவாடிய சிறுவன்.. அடுத்து செய்த பகீர் காரியம்
மும்பை : PUBG விளையாடுவதற்காக ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் ரூ .10 லட்சம் செலவழித்த 16 வயது சிறுவன் அவரது பெற்றோர் கண்டித்ததால், வீட்டை விட்டு ஓடிவிட்டார். சிறுவனை தேடி கண்டுபிடித்த மும்பை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகி பல இளைஞர்கள் வாழ்க்கையில் பெரும் துயரத்தை சந்தித்து வருகிறார்கள். விளையாட்டு விளையாட்டாக மட்டும் முடிந்துவிட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் பதின்ம வயது சிறுவர்கள், இந்த விளையாட்டு தான் உலகம் என்ற மனநிலையில் அடிமையாகிவிடுகிறார்கள்.
அப்படி அடிமையாகும் டீன்ஏஜ் சிறுவர்கள், பெற்றோர்களின் கணக்கில் இருந்து பணத்தை திருடி விளையாடுவது, சுற்றி நடப்பதை பற்றி சற்றும் கவலைப்படாமல் சுயநல மனதுடன் விளையாட்டே கதி என்று கிடப்பது என சூதாட்டத்திற்கு நிகரான குணநலன்களுடன் கிடக்கிறார்கள். அப்படிப்பட்ட சிறுவன் ஒருவன் செய்த செயலை இப்போது பார்ப்போம்.

10லட்சம் காலி
மும்பையின் ஜோகேஸ்வரி பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுவன் , வீட்டை விட்டு மாயம் ஆனான். அவன் PUBG க்கு அடிமையாகி 10 லட்சம் வரை செலவு செய்திருக்கிறான். இதை பெற்றோர் கண்டித்ததால் கோபத்தில் வீட்டை விட்டு சென்றுவிட்டார்,

என்ன நடந்தது
இதுபற்றி சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த மாதம் முதல் 16வயதாகும் அந்த சிறுவன் PUBG க்கு அடிமையாகி மொபைல் போனில் விளையாடியபடி இருந்துள்ளார். அவர் தனது தாயின் வங்கிக் கணக்கின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு தெரியும் என்பதால் அதன் மூலம் ரூ .10 லட்சம் செலவழித்து விளையாடி இருக்கிறார்

கடிதம் எழுதினான்
ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் 10 லட்சம் ரூபாய் செலவு செய்ததை பெற்றோர்கள் அறிந்ததும், அவர்கள் சிறுவனை திட்டினார்கள், அதைத் தொடர்ந்து அவர் ஒரு கடிதம் எழுதிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்.

அறிவுரை
புகாருக்கு பின்னர், தொழில்நுட்ப பிரிவினரின் உதவியுடன், குற்றப் பிரிவு போலீசார் சிறுவனைக் கண்டுபிடித்துள்ளனர். தப்பி ஓடிய சிறுவனை வியாழக்கிழமை பிற்பகல் அந்தேரியில் உள்ள மகாகாளி குகை பகுதியில் போலீசார் கண்டுபிடித்து அவரை காவல் நிலையம் அழைத்துவந்து அறிவுரை கூறி பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர்












Click it and Unblock the Notifications