எங்களுக்கு ஒரு நியாயம்; உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு நியாயமா? பழைய வீடியோவை வெளியிட்டு பாஜக கொந்தளிப்பு
மும்பை: மத்திய அமைச்சரான நாராயண் ரானேவுக்கு ஒரு நியாயம், உத்தவ் தாக்ரேவுக்கு ஒரு நியாயமா?'' என்று உத்தவ் தாக்கரே பேசிய பழைய வீடியோ ஒன்றை வெளியிட்டு பாஜகவினர் கொந்தளித்து வருகின்றனர்.
பா.ஜனதா மாநிலங்களவை எம்.பி.யும், மத்திய அமைச்சருமான நாராயண் ரானே மும்பையில் மக்கள் ஆசி யாத்திரை நடத்தியபோது மகாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு
''இந்திய சுதந்திரம் பெற்ற ஆண்டு பற்றி கூட உத்தவ் தாக்கரேவுக்கு தெரியவில்லை. அதிகாரிகளிடம் கேட்கிறார். அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் அவரை அறைந்திருப்பேன்'' என்ற மத்திய அமைச்சர் நாராயண் ராணேவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதனால் சிவசேனா தொண்டர்கள் ஆவேசம் அடைந்தனர். மாநிலம் முழுவதும் அவர்கள் மத்திய அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.

பெரும் பதற்றம்
மத்திய அமைச்சர் நாராயண் ராணே மீது மாநிலத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ரத்னகிரி போலீசார் நாராயண் ராணேவை நேற்று கைது செய்தனர்.
இதனால் மகாராஷ்டிரா முழுவதும் பதற்றம் தொற்றிக் கொண்டது. பல இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. பாஜக மற்றும் சிவசேனா தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மத்திய அமைச்சர் நாராயண் ராணேவை கைது செய்தது நியாயமல்ல என்றும் உத்தவ் தாக்கரே சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் என்று பாஜக குற்றம்சாட்டியது.

உத்தவ் தாக்கரே பேசிய வீடியோ
இந்த நிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அடிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பேசியதாக கூறப்படும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ''உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்த வழியைப் பாருங்கள். ஊதப்பட்ட பலூனைப் போல, அது காற்றில் மேலே செல்கிறது. அவர் மகாராஜின் புகைப்படத்திற்கு காலணி அணிந்து கொண்டு மாலை அணிவிக்கிறார். அவர் காலில் போட்டு இருக்கும் அதே காலணியால் அவரை அடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

யோகி மீது தாக்கு
மகாராஜின் முன் நிற்க உங்களுக்கு தகுதி இருக்கிறதா? இதுவே மகாராஜனை அவமதிக்கும் விதமாகும். யோகி பாஜகவின் இரத்தம். அப்படித்தான் இருப்பார். அவர் ஒரு யோகியாக இருந்தால் எப்படி முதலமைச்சராக இருக்க முடியும்? அவர் ஒரு யோகியாக இருந்தால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒரு குகைக்குள் சென்றிருக்க வேண்டும். முதல்வர் நாற்காலியில் அமர்ந்த பிறகு உங்களை ஒரு யோகி என்று அழைக்கிறீர்களா? என்று 2018-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பேசியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது நியாயமா?
இந்த வீடியோவை தொடர்ந்து பகிர்ந்து வரும் பாஜகவினர் '' முதல்வர் உத்தவ் தாக்கரேவை பேசினால் மத்திய அமைச்சர் என்றும் பாராமல் சாப்பிடும்போது கைது செய்கிறார்கள். ஆனால் 2018-ம் ஆண்டு உத்தர பிரதேச முதல்வர் யோகியை, உத்தவ் தாக்கரே மிக கடுமையாக பேசி இருக்கிறார். மத்திய அமைச்சருமான நாராயண் ரானேவுக்கு ஒரு நியாயம், உத்தவ் தாக்ரேவுக்கு ஒரு நியாயமா?'' என்று கொந்தளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications