அமித்ஷா அறிவித்த “மிஷன் 150”.. உத்தவ் தாக்கரே துரோகி! அவரை பழிவாங்கனும் -தொண்டர்கள் மத்தியில் ஆவேசம்
மும்பை: பாஜகவுக்கும் மகாராஷ்டிரா மக்களுக்கு துரோகம் செய்த உத்தவ் தாக்கரேவுக்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து இருக்கிறார்.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 288 இடங்களில் பாஜகவுக்கு 106 இடங்கள் கிடைத்தன. பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன.
ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.
ரேஷனில் பொருள் வாங்குவது போல.. எம்எல்ஏக்களை வாங்கும் பாஜக.. நம்பிக்கை வாக்கெடுப்பில் விளாசிய சோரன்
அணி தாவல்
இந்த நிலையில் கடந்த ஜூன் 21 ஆம் தேதி பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்கள் முகாமிட்டனர். அதன் பின்னர் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு நாட்கள் செல்ல செல்ல ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு பெரும் பலம் அதிகரித்தது.
ஏக்நாத் ஷிண்டே அரசு
இதனை தொடர்ந்து ஆட்சியை காப்பாற்றுவதற்கு தேவையான பெரும்பான்மை இல்லாததால் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பின்னர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் பாஜக அம்மாநிலத்தில் ஆட்சியமைத்தது. நீண்ட நாட்கள் கழித்து அமைச்சரவையும் விரிவாக்கப்பட்டது.
அமித்ஷா பேச்சு
இந்த நிலையில் மகாராஷ்டிரா பாஜக நிர்வாகிகள் மத்தியில் நடந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா, "உத்தவ் தாக்கரேவின் அதிகார பேராசை அவருக்கு எதிராக திரும்பிவிட்டது. உத்தவ் தாக்கரேவுக்கு முதலமைச்சர் பதவி தருவதாக நாம் வாக்குறுதியே அளிக்கவில்லை. உத்தவ் தாக்கரே பாஜக மட்டுமின்றி மகாராஷ்டிரா மக்களின் கொள்கைக்கும் துரோகம் செய்துவிட்டார். மோசடி அரசியல் செய்பவர்களை தண்டிக்க வேண்டும்.
மிஷன் 150
பிரிஹான் மும்பை மாநகராட்சிதான் இந்தியாவிலேயே பணக்கார மாநகராட்சியாக உள்ளது. அதை கட்டுப்பாட்டில் கொண்டு வர பாஜக நீண்டகாலமாக முயற்சித்து வருகிறது. பிரதமர் மோடியின் அறிவுரைப்படி பாஜக மற்றும் உண்மையான சிவசேனா கூட்டனி மும்பை மாநகராட்சித் தேர்தலில் 150 இடங்களில் வெல்ல வேண்டும். மக்கள் பாஜகவுடனும் மோடியுடனும் உள்ளார்கள்." என்று கூறினார்.