மும்பையின் தாராவி ஏரியாவில் கால் வைத்த கொரோனா.. ஒருவர் பலி.. மிகவும் அதிர்ச்சி இது.. ஏன் தெரியுமா?
மும்பை: மும்பையின் தாராவி குடிசை பகுதியில் கொரோனா வைரஸ் கால் வைத்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 56 வயது நபர் உயிரிழந்துள்ளார். இது தமிழர்கள் அதிகம் வசிக்கக் கூடிய பிராந்தியமாகும்.
Recommended Video
தாராவியில் கொரோனா வைரஸின் முதல் நோயாளி உறுதிப்படுத்தப்பட்டுள்ளார் என்று ஊடகங்கள் இன்று மாலை தெரிவித்திருந்தன. அதற்குள்ளாக அவர் உயிரிழந்த தகவல் இரவு வெளியே வந்துள்ளது.

2.1 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட தாராவியில் 10 லட்சத்திற்கும் அதிக மக்கள் வசிக்கிறார்கள். ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதி இதுவாகும். உலகிலேயே ஒரே பகுதியில் இத்தனை அதிகம் பேர் வசிப்பதும் தாராவி பகுதியில்தான். எனவே, இங்கு கொரோனா பரவியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எளிதாக அப்பகுதி மக்கள் பலருக்கும் பரவும் வாய்ப்பு உள்ளதுதான் இதற்கு காரணம்.
ஷாகுநகர் பகுதியைச் சேர்ந்த, 56 வயதான இந்த ஆண் நோயாளி சியோன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார். அவர் வசித்த வீட்டை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மற்ற குடியிருப்பாளர்கள் இன்னும் உள்ளே இருக்கிறார்கள், அந்த 56 வயது நபரின் குடும்பத்தைச் சேர்ந்த 8 முதல் 10 உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது மிகவும் கவலையளிக்கும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் நாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை முதல் 24 மணி நேரத்தில் 386 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. நாட்டில், பாதிக்கப்பட்ட, மொத்த நோயாளி எண்ணிக்கை 1637 ஐ தாண்டியுள்ளது.

இதுவரை இந்த தொற்றுநோயால் 38 பேர் இறந்துள்ளனர். கொரோனா வைரஸ் அதிகம் பரவாமல் இருக்க நாடு லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் பரவல் பட்டியலில், 335 பேருடன், மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இன்று 33 பேர் புதிதாக அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் இன்று 5 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
உலகின் ஏறக்குறைய அனைத்து நாடுகளும் கொரோனா பாதிப்பு பிடியில் உள்ளன. உலகில் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஈரான், இங்கிலாந்து போன்ற நாடுகள் இதனால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications