மும்பையில் 18+ அனைவருக்கும் மே 1 முதல் தடுப்பூசி போட வாய்ப்பில்லை.. காரணம் என்ன தெரியுமா?
மும்பை: தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மும்பையில் வரும் மே 1ஆம் தேதி முதல் 18+ அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படாது என மும்பை மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பைட் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வரும் மே 1ஆம் தேதி முதல் 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான முன்பதிவும் நேற்று கோவின் தளத்தில் தொடங்கப்பட்டது.
கொரோனா பரவலை தடுக்க 14 மாதங்களாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? ஹைகோர்ட் கேள்வி
18+ அனைவருக்கும் தடுப்பூசி
அதாவது நாட்டிலுள்ள சுமார் 80 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி இல்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக திட்டமிட்டபடி வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுமா என்பதில் கேள்வி எழுந்தது.
மே 1இல் தொடங்காது
இந்நிலையில், மும்பையில் வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படாது என மும்பை மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பைட் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "போதிய தடுப்பூசிகள் கிடைத்த பிறகே அடுத்த கட்ட தடுப்பூசி பணிகள் தொடங்கப்படும். மே 1ஆம் தேதி தொடங்கப்படாது.
காத்திருக்க வேண்டும்
போதிய அளவு தடுப்பூசி கிடைக்கும் வரை பொதுமக்கள் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் தடுப்பூசிகளைப் பெற முடியும். இது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும், தடுப்பூசி மையங்களிலும் முறையாக மாஸ்க்குகளை அணியுங்கள். 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டால் தங்களுக்குத் தடுப்பூசி கிடைக்குமா என்று முதியவர்கள் அச்சம் கொள்ள வேண்டாம், தடுப்பூசிகள் அனைவருக்கும் சரியான நேரத்தில் கிடைக்கும்.
முதியவர்கள் காத்திருக்க வேண்டாம்
இப்போது கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, மும்பையில் மூத்த குடிமகன்கள் தடுப்பூசி மையங்களுக்கு தேவையின்றி வந்து காத்திருக்க வேண்டாம். கூடிய விரைவில் போதிய அளவு தடுப்பூசி கிடைத்ததும் 45+ அனைவருக்கும் தடுப்பூசி பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும். அதேபோல 18+ அனைவருக்கும் தடுப்பூசி பணிகள் தொடங்கப்பட்டாலும், மூத்த குடிமகன்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் மையங்கள் தொடர்ந்து செயல்படும். இதற்காக கூடுதல் மையங்களையும் ஏற்படுத்தவுள்ளோம்" என அவர் தெரிவித்துள்ளார்.