வீடு வீடாக வேக்சின் தந்திருந்தால் பல உயிர்களை காத்திருக்கலாம்.. மத்திய அரசை விளாசிய மும்பை ஹைகோர்ட்
மும்பை: வீடு வீடாக வேக்சின் கொடுக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தால் பல முதியவர்களின் உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் என்று மும்பை ஹைகோர்ட் மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளது.
இந்தியாவில் ஒரு பக்கம் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் வேக்சின் தேவையும் உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் வேக்சினுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வயது முதிர்ந்தவர்களுக்கு, வீட்டை விட்டு வெளியே வர முடியாத மாற்று திறனாளிகளுக்கு வீட்டிற்க்கே சென்று வேக்சின் கொடுக்க வேண்டும் என்று மும்பை ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் த்ருத்தி கப்பாடியா, குணால் திவாரி ஆகியோர் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மும்பை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தீபங்கர் தாத்தா, நீதிபதி எஸ்ஜி குல்கர்னி ஆகியோர் முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்தனர். அதில், மத்திய அரசு முன்பே வீடு வீடாக வேக்சின் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்திருக்க வேண்டும்.
இப்படி செய்திருந்தால் பல முதியவர்கள், பிரபலமானவர்கள், முக்கியஸ்தர்கள், பொது மக்கள் பலியாகி இருக்க மாட்டார்கள். எல்லோராலும் வேக்சின் சென்டர் சென்று வரிசையில் நின்று வேக்சின் பெற்றுக்கொண்டு இருக்க முடியாது.
முதியவர்கள் வேக்சின் பெறுவதற்காக லைனில் நிற்பதை பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. இது தொடர்பாக ஏப்ரல் 22ம் தேதியே மத்திய அரசிடம் விளக்கம் கேட்டோம். ஆனால் மூன்று வாரம் ஆகியும் மத்திய அரசு இதில் பதில் அளிக்கவில்லை.
இது தொடர்பாக மே 19ம் தேதி மத்திய அரசு எங்களிடம் பிரமான பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வயதானவர்களுக்கு வீடு வீடாக ஏன் வேக்சின் கொடுக்கவில்லை என்று விளக்கம் அளிக்க வேண்டும். வெளிநாடுகளில் எல்லாம் இந்த முறையை ஏற்கனவே தொடங்கிவிட்டனர்.
ஆனால் இந்தியாவில் மட்டும் நல்ல திட்டங்கள் வர கால தாமதம் ஆகிறது. வயதானவர்கள் மட்டுமின்றி சாலையில் உள்ள பிச்சைக்காரர்கள், வீடு இல்லாதவர்களுக்கும் எப்படி வேக்சின் கொடுக்கப்படும் என்பதற்கான திட்டங்களை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று மும்பை ஹைகோர்ட் கூறியுள்ளது.