சிவசேனா சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்-என் தலையையே வெட்டினாலும் அணி மாறமாட்டேன் என சபதம்
மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட குழப்பம் நிலவி வரும் நிலையில் பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் சிவசேனாவின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. மும்பையில் உள்ள அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் சஞ்சய் ராவத் நாளை ஆஜராக உத்தரவிட்டு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருக்கிறது.
10 சிவசேனா எம்எல்ஏ-க்களுடன் பேச்சுவார்த்தை.. மகாராஷ்டிராவில் ஆட்டம் மாறுகிதா? சஞ்சய் ராவத் ஆவேசம்
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
மகாராஷ்டிரா அரசியலில் ஆளும் சிவசேனா கூட்டணி அரசுக்கு எதிராக 40க்கும் மேற்பட்ட சிவசேனா கட்சி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் மகாராஷ்டிரா அரசு எந்த நேரத்திலும் கவிழும் நிலை உள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்ய சிவசேனா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதிரடி சம்மன்
சிவசேனாவில் நிலவும் உட்கட்சி குழப்பத்துக்கு பாஜகதான் காரணம் என கடுமையாக விமர்சித்து வருகிறார் அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத். இந்த நிலையில் பத்ரா சால் நில முறைகேடு வழக்கில் சஞ்சய் ராவத் நாளை மும்பை அலுவலகத்தில் ஆஜராக அமலாக்கப் பிரிவு அதிரடியாக சம்மன் அனுப்பி உள்ளது.
என்ன வழக்கு?
மும்பை கோரகாவ் பகுதி பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணி விவகாரத்தில் ரூ.1,034 கோடி நில மோசடி நடந்ததாக சஞ்சய் ராவத் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் ஏற்கனவே சஞ்சய் ராவத்துக்கு மிக நெருக்கமான பிரவீன் ராவத் கைது செய்யப்பட்டிருந்தார். அத்துடன் சஞ்சய் ராவத்துக்கு சொந்தமான சொத்துகள் பலவற்றையும் அமலாக்கப் பிரிவு ஏற்கனவே முடக்கி வைத்திருந்தது. இந்நிலையில் மீண்டும் பத்ரா சால் நில முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பி இருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சஞ்சய் ராவத் சவால்
இதனிடையே தமக்கு சம்மன் அனுப்பியது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் சஞ்சய் ராவத் பதிவிட்டுள்ளதாவது: எனக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருப்பதாக அறிந்தேன். நல்லது. மகாராஷ்டிரா அரசியலில் மிகப் பெரிய அரசியல் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. பால்தாக்கரேவின் சிவசேனாக்கள் மிகப் பெரிய யுத்தம் நடத்தி வருகிறோம். என்னை தடுத்து நிறுத்தும் சதி இது. நீங்கள் என்ன செய்தாலும் நான் குவஹாத்தி பாதையில் பயணிக்க மாட்டேன் (அதிருப்தி கோஷ்டிக்கு தாவுதல்).. என் தலையையே வெட்டினாலும் அது நடக்காது.. என்னை கைது செய்து கொள்ளலாம்! என்று கூறியுள்ளார்.