டைட்டானிக் படக் காட்சிகள் போல் 11 மணி நேரம் தத்தளித்தேன்.. புயலால் மூழ்கி மீண்ட கப்பல் பணியாளர்!
மும்பை: டைட்டானிக் படத்தில் வருவது போல் கடலில் லைஃப் ஜாக்கெட் போட்டுக் கொண்டு தத்தளித்தேன் என மும்பையில் கப்பல் மூழ்கிய போது உயிர் பிழைத்தவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
தென் கிழக்கு அரபிக் கடலில் உருவான டவ் தே புயல் குஜராத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கரையை கடந்தது. இதன் தாக்கம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் அரபிக் கடலில் எண்ணெய் துரப்பன பணியில் ஈடுபட்டிருந்த ஓ என் ஜி சி கப்பல்களின் நங்கூரங்கள் அறுபட்டு கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. இந்த கப்பல்களில் தங்கி பணிபுரிந்து வந்த 800-க்கும் அதிகமானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

கடலில் மூழ்கி மரணம்
ஒரு கப்பலில் இருந்த 37 பேர் கடலில் மூழ்கி மரணமடைந்தனர். மேலும் 38 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 35 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் உள்ள இந்த படகில் உள்ளவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் கண்ணீரோடு பகிர்ந்துள்ளார்கள்.

கடற்படை
ஸ்வப்னில் சவாந்த் என்பவர் கூறுகையில் எங்களது உயிர்களை காப்பாற்றிய கடற்படைக்கு சல்யூட். டவ் தே புயலின் போது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. கடல் அலைகள் பெரியதாக இருந்தன. தங்கள் உயிரை பணயம் வைத்து எங்கள் உயிரை கடற்படையினர் மீட்டனர் என்றார்.

11 மணி நேரமாக போராடியவர்
இது குறித்து அமித்குமார் குஷ்வாஹா கூறுகையில் 11 மணி நேரம் கடலில் தத்தளித்தேன். லைஃவ் ஜாக்கெட் உயிர் கவசம் அணிந்து கொண்டிருந்தேன். கப்பல் மூழ்கத் தொடங்கியவுடன் கடலில் குதித்தேன். டைட்டானிக் படத்தில் வருவது போல் நாங்கள் கடலில் உயிருக்கு போராடினோம்.

உயிருடன் இருக்கோம்
எங்களுடன் இருந்த பெரும்பாலானோர் மூழ்கினர். கடற்படையினர் மட்டும் சரியான நேரத்தில் வந்து எங்களை மீட்காவிட்டால் இன்று ஒருவர் கூட உயிருடன் இருந்திருக்க மாட்டோம். அவர்களால் தான் நாங்கள் உயிருடன் இருக்கிறோம்.

மூழ்கத் தொடங்கிய கப்பல்
இதுகுறித்து விகாஷ் குமார் கூறுகையில் கப்பல் மூழ்கத் தொடங்கிய போது நான் கப்பலில் இருந்து குதித்தேன். அப்போது எனது கால் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடற்படையினர் எங்களை மீட்காவிட்டால் இன்று நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன் என்றார்.












Click it and Unblock the Notifications