சட்டென ஆர்எஸ்எஸ் குறித்து கேட்ட டாடா... மதபாகுபாடு பார்க்காத அமைப்பு என பதிலளித்த நிதின் கட்கரி
மும்பை: ஆர்.எஸ்.எஸ். சார்பில் தொடங்கப்படும் மருத்துவமனையில் இந்துக்களுக்கு மட்டுமே தானே சிகிச்சையளிப்பீர்கள் என தொழிலதிபர் ரத்தன் டாடா தன்னிடம் கேட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவரும் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான நிதின் கட்கரி புனேவில் உள்ள சின்ஹாகாத் பகுதியில் மருத்துவமனையை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தான் மகாராஷ்டிரா மாநில அமைச்சராக இருந்தபோது தொழிலதிபர் ரத்தன் டாடாவுடான சுவாரஸ்ய கலந்துரையாடலை பகிர்ந்து உள்ளார்.

அவர் பேசியதாவது, "நான் மகாராஷ்டிரா மாநில அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவுரங்காபாத் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெட்கேவர் பெயரில் மருத்துவமனை ஒன்று அமைக்கப்பட்டது. அதை தொழிலதிபர் ரத்தன் டாடா திறந்து வைக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். மூத்த நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தனர். அதற்காக என்னிடம் அவர்கள் உதவி கோரினர்.
அதன் பின்னர் நான் ரத்தன் டாடா அவர்களை தொடர்புகொண்டு கேன்சரால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள மருத்துவமனையை திறந்து வைக்க வேண்டும் என அவருக்கு அழைப்பு விடுத்தேன். அவருக்கு சம்மதம் தெரிவித்தார்.
திறப்புவிழா அன்று மருத்துவமனையை நாங்கள் நெருங்கியபோது ரத்தன் டாடா என்னிடம் ஒரு கேள்வி எழுப்பினார். 'இந்த மருத்துவமனையில் இந்துக்கள் மட்டும்தான் சிகிச்சை பெற முடியுமா?' என அவர் வினவினார். நீங்கள் ஏன் அவ்வாறு நினைக்கிறீர்கள் என்று நான் கேட்டேன். 'இது ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு சொந்தமான மருத்துவமனைதானே' என்று அவர் உடனே பதிலளித்தார்.
இந்த மருத்துவமனை அனைத்து சமுதாயத்துக்குமானது. மதத்தின் அடிப்படையில் எவ்வித பாகுபாட்டையும் ஆர்.எஸ்.எஸ். காட்டாது நான் அவருக்கு விளக்கமளித்தேன்." என்றார்.












Click it and Unblock the Notifications