வேலைக்கு போனால் திரும்புவோமா? அச்சத்தில் காஷ்மீர் பண்டிட்கள்! உத்தவ் தாக்கரே வருத்தம்
மும்பை: ‛‛காஷ்மீரில் காஷ்மீர் பண்டித்கள் வேலைக்கு போனால் மீண்டும் திரும்புவோமா என்ற பயத்தில் உள்ளனர். அச்ச மனநிலையில் பணி செய்யும் அவர்கள் வீடு திரும்பினாலும் சுட்டு கொலை செய்யப்படுகின்றனர். இதனால் அங்கிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேற முயற்சிக்கின்றனர்'' என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவக் தாக்கரே வருத்தம் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் கவர்னர் மனோஜ் சின்ஹா தலைமையில் நிர்வாகம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் காஷ்மீர் பண்டித்கள் குறிவைத்து பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

காஷ்மீரி பண்டித்கள் சுட்டுக்கொலை
அதாவது கடந்த வியாழக்கிழமை வங்கி மேலாளர் விஜய் குமார் அவரது அலுவலகத்திற்கு வெளியே பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு முன்பு சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயது நிரம்பிய பெண் ஆசிரியரை ரஜினி பாலா கோபால்போராவில் உள்ள அரசு பள்ளியில் சுட்டு கொலை செய்யப்பட்டார். அதற்கு முன்பு அரசு ஊழியர் ராகுல்பட் உள்பட போலீசார், பொதுமக்கள் தொடரந்து துப்பாக்கியால் கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இதனால் காஷ்மீர் பண்டித்கள் தொடர் போராட்டம் நடத்தி அரசு பணிகளை விடுத்து வெளியேற துவங்கி உள்ளனர். காஷ்மீர் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்நிலையில் தான் காஷ்மீரி பண்டித்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மத்திய அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

உத்தவ் தாக்கரே வருத்தம்
இந்நிலையில் காஷ்மீர் பண்டித்களின் படுகொலை குறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வரும், சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே வருத்தம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: கடந்த சில நாட்களாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில், காஷ்மீர் பண்டித்கள் மற்றும் இந்துக்கள் குறிவைத்து கொல்லப்படுவது நடந்து வருகிறது. ஒரு மாதத்திற்குள் ஒன்பது காஷ்மீரி பண்டித்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வேலைக்கு சென்றால் மீண்டும் பாதுகாப்பாக திரும்புவோமா? என்ற அச்சம் அவர்களுக்கு எழுந்துள்ளது. பாதுகாப்பாக வீடு திரும்பினாலும் கூட வீட்டில் வைத்து கொல்லப்படுகின்றனர். இதனால் நூற்றுக்கணக்கான காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். இது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இது எனக்கும் கவலையை ஏற்படுத்துகிறது.

உதவிகள் செய்வோம்
மகாராஷ்டிரா எப்போதும் காஷ்மீர் பண்டித்களுக்கு உதவியாக இருக்கும். அவர்களுக்கு தேவையான உதவிகளை மகாராஷ்டிரா அரசு நிச்சயம் செய்யும். 1995ல் மகாராஷ்டிராவில் சிவசேனா அரசு அமைந்தபோது பாலாசாகேப் தாக்கரே, மகாராஷ்டிராவில் உள்ள காஷ்மீரி பண்டித்களின் குழந்தைகளுக்கு கல்வியில் இடஒதுக்கீடு வழங்கினார். இது தான் காஷ்மீரி பண்டித்களுக்கும் எங்களுக்கும் உள்ள உறவு. இதனை கடமையாக கருதுகிறோம். காஷ்மீர் நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். காஷ்மீரி பண்டித்களின் தலைவர்களுடனும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்த விஷயத்தில் மகாராஷ்டிரா தனது கடமையை செய்யும்.'' என்றார்.

கதவுகள் திறந்தே இருக்கும்
இதேபோல் உத்தவ் தாக்கரேவின் மகனும், அமைச்சருமான ஆதித்ய தாக்கரே கூறுகையில், ‛‛ஜம்மு காஷ்மீர் காஷ்மீர் பண்டித்கள் குறிவைத்து கொல்லப்படுவது துரதிர்ஷ்டவசமானது. அவர்களுக்கு எப்போதும் மகாராஷ்டிரா மாநிலத்தின் கதவுகள் திறந்தே இருக்கும். நாங்கள் அவர்களுக்கு நிச்சயம் ஆதரவாக இருப்போம். காஷ்மீர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இது வருத்தமளிக்கிறது. காஷ்மீர் பண்டித்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கையை நிச்சயம் மத்திய அரசு மேற்கொள்ளும் என நம்புகிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications