சீமானின் 'பச்சை மட்டை' போல..மகாராஷ்டிரா ஆதித்ய தாக்கரேவின் 'ஐஸ் கட்டி' வைத்தியம் எச்சரிக்கை!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா தொண்டர்களை சித்ரவதை செய்யும் அனைவரையும் புதிய ஆட்சி அமைந்ததும் போலீஸ் சித்ரவதையான 'ஐஸ் கட்டியில்' படுக்க வைப்போம் என உத்தவ் தாக்கரே மகனும் முன்னாள் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் வரும் 20-ந் தேதி நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் தற்போது அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடைகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்திலும் நவம்பர் 20-ந் தேதி 2-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சரும் உத்தவ் தாக்கரே மகனுமாகிய ஆதித்ய தாக்கரே, சிவசேனா தொண்டர்களை பாஜக கூட்டணி ஆட்சி சித்ரவதை செய்து வருகிறது. எங்களது தொண்டர்களை சித்ரவதை செய்பவர்களுக்கு 'ஐஸ் கட்டி' தண்டனை (போலீஸ் சித்ரவதை) இருக்கிறது. ஐஸ் கட்டியில் படுக்க வைத்துதான் பதில் தருவோம் என்றார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவின் அமைச்ச ராம்தாஸ் கதம், ஒருங்கிணைந்த சிவசேனா கட்சியில் ஆதித்ய தாக்கரேவின் நண்பராக என் மகன் இருந்தார். ஆனாலும் என் மகனையும் அவரது ஆதரவாளர்களையும் ஓரம் கட்டி ஒழித்துக் கட்டியவர்தான் ஆதித்ய தாக்கரே. உத்தவ் தாக்கரே ஆட்சியில் எனக்கு அமைச்சர் பதவி மறுத்துவிட்டனர். எங்கள் குடும்பத்துக்கே துரோகம் செய்தவர் ஆதித்ய தாக்கஏ. அவர் இப்படி பேசுவது கண்டனத்துக்குரியது என்றார்.
தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான் பொதுக் கூட்டங்களில் பேசுகையில், நாம் தமிழர் கட்சி ஆட்சியில் தங்களை விமர்சித்தவர்களை எல்லாம் பச்சை மட்டையால் வெளுத்தெடுப்பேன் என தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார். தற்போது அவரது பாணியில் ஆதித்ய தாக்கரே, ஐஸ் கட்டியில் படுக்க வைப்போம் என எச்சரிக்கை விடுத்திருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.












Click it and Unblock the Notifications