குலாம் நபி ஆசாத் சொன்னது சரிதான்.. காங்கிரஸ் மூழ்கும் கப்பல்.. மகாராஷ்டிரா துணை முதல்வர் அட்டாக்!
மும்பை: குலாம் நபி ஆசாத் சொன்னது சரிதான் என்றும்..காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல் என்றும்.. கப்பலை மீட்க முடியாததால் அனைவரும் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர் என்றும் மகாராஷ்டிரா துணை முதல்வரும், அம்மாநில பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்த தேர்தல்களில் ஏற்பட்ட தொடர் தோல்விகளால் காங்கிரஸ் கட்சி துவண்டு போயிருக்கும் நிலையில், அக்கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் பலர் விலகி வருவது மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர முகமாக இருந்த ஜோதிர் ஆதித்ய சந்தியா தொடங்கி, கபில் சிபல், அமரிந்தர் சிங், அஸ்வினி குமார் என பல முக்கிய தலைவர்கள் காங்கிரஸில் இருந்து விலகினர்.
காங்கிரசுக்கு முழுக்கு.. பாஜகவில் சேராத குலாம் நபி ஆசாத்.. பின்னணியில் உள்ள 5 முக்கிய காரணங்கள்!
குலாம் நபி ஆசாத் விலகல்
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத்தும் கட்சியில் இருந்து விலகியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள குலாம் நபி ஆசாத், சமீப காலமாக அக்கட்சியின் தலைமை மீது அதிருப்தியில் இருந்தார். கடந்த 16 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரசின் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததோடு, கட்சியில் இருந்தும் விலகுவதாக நேற்று அறிவித்தார்.
தேவேந்திர பட்னாவிஸ் கருத்து
குலாம் நபி ஆசாத் காங்கிரசில் இருந்து வெளியேறிய சம்பவம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை வைத்து அக்கட்சியை பாஜக தலைவர்கள் வசைபாட தொடங்கியிருக்கின்றனர். அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வரும், அம்மாநில பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், குலாம் நபி ஆசாத் காங்கிரசில் இருந்து விலகியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
கப்பலை மீட்க முடியாது
நாக்பூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ''காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல். கப்பலை மீட்க முடியாது என்று நினைப்பவர்கள் அக்கட்சியில் இருந்து வெளியேற தொடங்கிவிட்டனர். குலாம் நபி ஆசாத் எழுப்பிய கேள்விகள் மிகவும் முக்கியமானவை என்றே நான் நினைக்கிறேன். எப்படியிருந்தாலும் அது காங்கிரசின் உள்கட்சி விவகாரம். நான் இதில் பதிலளிக்கப்போவது இல்லை'' என்றார்.
விதிகளின் படி நடைபெறும்
சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி- சம்பாஜி பிரிகடே கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது குறித்து தேவேந்திர பட்னாவிசிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பட்னாவிஸ், ''ஒருவருக்கு வீழ்ச்சி தொடங்கும் போது அவர் அறிவுப்பூர்வமாக சிந்திப்பதிலும் தோல்வி அடைந்து விடுவார்'' என்றார். தசரா பண்டிகை நெருங்கும் நிலையில், சிவசேனாவின் இரு அணிகளும் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கும் என்று தகவல் வெளியாகி வரும் நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த தேவேந்திர பட்னாவிஸ், 'விதிப்படி அனைத்தும் நடைபெறும். விதிகளை மீறும் வகையில் ஏதேனும் கோரிக்கை வந்தால் அதை அரசு ஏற்காது' என்றார்.