சீன நிறுவனத்துடன் செய்த முதலீட்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்படவில்லை.. மகாராஷ்டிரா அரசு திட்டவட்டம்
மும்பை: சீன நிறுவனங்களுடன் கடந்த வாரம் செய்துகொள்ளப்பட்ட மூன்று ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்படவில்லை என்று மகாராஷ்டிர தொழில்துறை அமைச்சர், சுபாஷ் தேசாய் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடையேயான உறவு சமீபகாலமாக மோசமடைந்து வருகிறது. லடாக் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேரை சீன நாட்டு ராணுவம் கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷம் நாடு முழுக்க வலுத்து வருகிறது. இந்த நிலையில்தான் ஜூன் 15ஆம் தேதி மகாராஷ்டிரா அரசு 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை 12 நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் செய்து கொண்டது.
இதில் 3 சீன நாட்டு நிறுவனங்களாகும். இந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட சில மணி நேரங்களில் லடாக் எல்லையில் மோதல் நடைபெற்ற விவகாரம் வெளியே வந்தது. இந்த மூன்று நிறுவனங்களும் புனே மாவட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.
இந்தியாவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.. சீனாவிற்கு எதிராக கொந்தளிக்கும் சொந்த மக்கள்.. என்ன நடந்தது?
ஆனால் சீன ராணுவத்தின் அத்துமீறல் தொடர்பான செய்திகள் வெளிவந்ததால் இந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவின.
ஆனால், மகாராஷ்டிரா தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் வெளியிட்டுள்ள ஒரு விளக்கத்தில், சீன நிறுவனங்களுடன் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், அடுத்த கட்ட நகர்வு பற்றிய அரசின் கொள்கை முடிவு காத்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.