மகாராஷ்டிராவில் கனமழை: வெள்ளத்தில் தத்தளித்த பெண்... மீட்கப்படும் போது மீண்டும் தவறி விழுந்த சோகம்
மகாராஷ்டிராவில் கடும் மழை வெள்ளத்தில் சிக்கி மக்கள் தவித்து வருகின்றனர். பெண் ஒருவர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்படும் போது கடைசி நேரத்தில் தண்ணீரில் விழுந்த காட்சி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொட்டி வரும் கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குடியிருப்புகள் முற்றிலும் மூழ்கியுள்ளன. சிப்லுன் நகரத்தில் வெள்ளத்தில் சிக்கி தத்தளிப்பவர்களை கயிறுகளை கட்டி பலர் மீட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. பேரிடர் மீட்புப்படையினர் வெள்ளத்தில் சிக்கிய பெண்ணை மீட்கும் போது கடைசி நேரத்தில் அவர் மீண்டும் தண்ணீரில் விழும் காட்சிகளும் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
Recommended Video
தென்மேற்குப் பருவமழை மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாவே தீவிரமடைந்துள்ளது. விடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் மகாராஷ்டிராவில் பல மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
வீடுகள் முற்றிலும் மூழ்கியுள்ளன. பெரு வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களை கடலோர காவல்படையினரும் பேரிடர் மீட்புப்படையினரும் மீட்டு வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளில் ஜூலை மாதத்தில் பெய்த அதிகனமழை என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
கொங்கன் பிராந்தியத்தில் மீட்பு நடவடிக்கைகளுக்காக தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ரத்னகிரி, ராய்காட், கோலாப்பூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மும்பையில் இருந்து 250 கி.மீ தொலைவில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கடலோர நகரமான சிப்லுன் முற்றிலும் மூழ்கியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி தத்தளிப்பவர்களை கயிறுகளை கட்டி பேரிடர் மீட்புப்படையினர் மீட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
பெண் ஒருவர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்படும் போது பல மாடிக்கட்டிடத்தின் உயரம் வரை சென்று கடைசி நேரத்தில் பிடி தளர்ந்ததால் அவர் மீண்டும் தண்ணீரில் விழும் காட்சிகளும் வெளியாகி மக்களை பதைபதைப்புக்கு ஆளாகியுள்ளது.
வெள்ள நீரில் பெண் விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையில் மழை சில நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.