'ரிலீஸுக்கு பின்.. எனது செயலை நினைத்து நிச்சயம் பெருமைப்படுவீர்கள்..' சிறையில் உருகிய ஆர்யன் கான்
மும்பை: மும்பை சிறையில் உள்ள ஆர்யன் கானுக்கு கவுன்சிங் நடத்தப்பட்டதாகவும் அப்போது அவர் விடுதலைக்குப் பிறகு ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடுவேன் எனத் தெரிவித்ததாகவும் என்சிபி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி ரேவ் பார்டி நடைபெற உள்ளதாகக் கடந்த மாதம் என்சிபி எனப்படும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலை அடிப்படையாகக் கொண்டு மாறுவேடத்தில் அந்த சொகுசு கப்பலில் ஏறிய என்சிபி அதிகாரிகள், கப்பல் புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே ரேவ் பார்டி நடப்பதையும் அதில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்தனர்.
தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்து அடம்- ரஷ்யாவில் 1,000-த்தை தாண்டிய ஒருநாள் கொரோனா மரணங்கள்
ஆர்யன் கான் கைது
இதையடுத்து சொகுசு கப்பலில் இருந்த 10 பேரை முதலில் தடுப்பு காவலில் வைத்த என்சிபி அதிகாரிகள், பின்னர் அவர்களைக் கைது செய்தனர். இதில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் 23 வயது மகன் ஆர்யன் கானும் கைது செய்யப்பட்டார். இந்தச் சூழலில் ஜாமீன் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆர்யன் கான் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கத் தேவையில்லை என்று தெரிவித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் கோரினர். மேலும், ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கவுன்சிலிங்
அதேநேரம் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட போது, அவரிடம் போதைப்பொருள் இல்லை என்பதால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என அவரது வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து இந்த மனு மீதான விசாரணை வரும் அக். 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தற்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஆர்யன் கானுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டதாக என்சிபி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏழைகளுக்கு உதவுவேன்
அப்போது ஆர்யன் கான் தான் விடுவிக்கப்பட்ட பிறகு அனைவரும் பெருமை கொள்ளும் செயல்களைச் செய்வேன் என என்சிபி மண்டல இயக்குநர் சமீர் வான்கடேவிடம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விடுதலைக்குப் பிறகு ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார், மேலும், இன்னொரு முறை தவறான காரணங்களுக்காகத் தனது பெயர் செய்தித்தாள்களில் வராது என்று உறுதி அளித்த ஆர்யன் கான், அனைவரும் பெருமை கொள்ளும் வகையிலான விஷயங்களைச் செய்வேன் என்றும் உறுதி அளித்துள்ளார்.
மும்பை சிறை
ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்யன் கான் தற்போது மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட போது 2 பெண்கள் உட்பட 10 பேர் மொத்தம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
என்ன நடந்தது
ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட போது அவரிடம் எந்தவொரு போதைப்பொருளும் கைப்பற்றப்படவில்லை என்பது உண்மைதான் என்றாலும் கூட அவர் கடந்த சில ஆண்டுகளாகவே போதைப் பொருட்களைப் பயன்படுத்தி வருவதாகவும் சர்வதேச போதைப் பொருள் நெட்வோர்க்கிலும் அவருக்குத் தொடர்பு உள்ளதாக என்சிபி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. அந்த சொகுசு கப்பலில் என்சிபி அதிகாரிகள் 13 கிராம் கோகோயின், 5 கிராம் எம்.டி, 21 கிராம் சரஸ், 22 MDMA மாத்திரைகள் மற்றும் ரூ .1.33 லட்சம் ரொக்கத்தை என்சிபி அதிகாரிகள் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.