ஓமிக்ரான் : மத்திய பிரதேசம், உத்தரபிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு - மகாராஷ்டிராவில் கட்டுப்பாடு
ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் மத்திய பிரதேசத்தை அடுத்து உத்தரபிரதேசத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை: ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் மத்திய பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்து உள்ளது.
நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்டோர் ஓமிக்ரான் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி கொரோனா பாதிப்பு 6,681 பேராக உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்திற்கு 104 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ஓமிக்ரான் பரவல் வேகம் டெல்டாவை விட 3 மடங்கு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் எழுதியுள்ள இந்தக் கடிதத்தில், "உள்ளூரில் இருக்கும் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை வேண்டும். ஒரு வாரத்தில் பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதம் மேல் இருந்தால் அல்லது ஆக்ஸிஜன் மற்றும் ஐசியு படுக்கைகளில் 40 சதவீதம் மேல் நிரம்பினால் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கலாம். இந்த நிலையை அடையும் முன்னரே மாநில அரசுகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்க வேண்டும்.
ஓமிக்ரான் தவிர, டெல்டா உருமாறிய கொரோனாவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்னும் உள்ளது. தொலைநோக்கு பார்வையுடன் தக்க நேரத்தில் மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விரைவாக முடிவு எடுக்க வசதியாக மாவட்ட ரீதியில் முடிவுகளை எடுக்க நடவடிக்கைகள் தேவை. சோதனை மற்றும் கண்காணிப்பு முறைகளின் ஒரு பகுதியாக, வீடு வீடாகச் சென்று சோதனை நடத்தலாம். கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியலாம் எனவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நாடு முழுவதும் 300 பேர் ஓமிக்ரான் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் மேலும் 23 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதியானது. மகாராஷ்டிராவில் மொத்த ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 88 ஆக உள்ளது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிகபட்ச பாதிப்பு உள்ளது.
ஓமிக்ரான் பரவல் மகாராஷ்டிராவில் அதிகரித்து வருவதை அடுத்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்து உள்ளது. இதன்படி கிறிஸ்துமஸ், புத்தாண்டை வழிபாட்டு தலங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் எளிமையாக கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று இரவு நாளை 25 ஆம் தேதி இரவு நடக்கும் பிரார்த்தனைகளில் கிறிஸ்தவ ஆலயங்களில் 50 சதவீதம் பேர் மட்டும் பங்கு பெறவேண்டும். ஆலயங்களுக்கு வெளியில் கடைகள் போடக்கூடாது. அதிக மக்கள் கூடும் வகையில் பேரணி, ஊர்வலங்கள், வானவேடிக்கை போன்ற நிகழ்ச்சிகளை நடத்த கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்து உள்ளது.
முன்னதாக மத்திய பிரதேசத்தில் நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை இரவு நேர ஊரடங்கு கொண்டு வரப்படுவதாக மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கு இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு
உத்தரபிரதேச மாநிலத்திலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் மாநில அரசு அறிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் 2022ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் கூட்டங்கள் அதிக அளவில் நடைபெறும். இது கொரோனா அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்து விடக்கூடாது என்பதால், அலகாபாத் நீதிமன்றம் தேர்தலை தள்ளிவைக்க ஏற்பாடு செய்யுமாறு தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தேர்தல் பிரசார கூட்டத்தில் மக்கள் கூடுவதை தடை செய்ய பிரதமர் மோடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு டிசம்பர் 25ஆம் தேதியில் இருந்து இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications