உங்களுக்கு வசதி இருக்குதுன்னா அதிக கார்களை வெச்சுக்குவீங்களா? அப்ப பார்க்கிங்? மும்பை ஹைகோர்ட் டோஸ்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் போதுமான இடவசதி இல்லாதவர்கள் அதிக எண்ணிக்கையிலான கார்களை வைத்திருக்க அதிகாரிகள் அனுமதிக்க கூடாது என மும்பை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் வாகனங்களை நிறுத்தும் இடங்களை குறைக்க வேண்டும் என கட்டுமான நிறுவனங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் சந்தீப் தாக்கூர் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தமது மனுவில், கட்டுமான நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட இந்த கட்டுப்பாடுகள் தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி இருந்தார். இந்த மனுவை மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா, நீதிபதி ஜி.எஸ். குல்கர்னி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
அப்போது, ஒரு வீடு வைத்திருக்கும் குடும்பங்கள் தங்களது குடியிருப்புகளில் போதுமான வாகன நிறுத்தும் இடம் இல்லாத நிலையில் 4 அல்லது 5 கார்கள் வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது. பொதுவாக கார்களை வசதி இருக்கிறது என வாங்கிவிட்டால் நிறுத்துவதற்கான இடம் இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
புதிய கார்கள் வாங்குவதை குறைக்க வேண்டும். வசதி இருப்பதற்காக ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள் 4 அல்லது 5 கார்களை வாங்குவதை அனுமதிக்கவும் கூடாது. அப்படி வாங்கினால் அவர்களிடம் வாகனங்களை நிறுத்தும் இடம் இருக்கிறதா என்பதை அதிகாரிகள் உறுதி செய்யவும் வேண்டும்.

வாகன நிறுத்தும் இடம் தொடர்பான சரியான வழிகாட்டுதல்கள் இல்லாவிட்டால் பெரும் குழப்பம்தான் வரும். அத்தனை சாலைகளிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சாலைகளில் 30% இடங்களை வாகனங்கள்தான் ஆக்கிரமித்துக் நிறுத்தப்பட்டுள்ளன.
சாலைகளின் இரு பக்கமும் வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர். பொதுமக்களின் பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு வாகன கட்டுப்பாடுகள் தொடர்பான கொள்கைகளை உருவாக்கவும் வேண்டும் என்றனர். இது தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞர் மணீஷ் பாப்லேவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications