குடியரசு துணைத் தலைவர்.. எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யார்? டெல்லியில் தீவிர ஆலோசனை!
மும்பை: குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்காக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் குடியரசுத் தலைவர் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதற்காக பாஜக கூட்டணி சார்பாக திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஜூலை 19ம் தேதி கடைசி நாளாகும். வரும் ஆகஸ்ட் மாதம் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவடைய இருக்கும் நிலையில், இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான பாஜக வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார்கள் என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்தது. இதனைத்தொடர்ந்து மேற்கு மாநில ஆளுநரான ஜெகதீப் தன்கர் போட்டியிடுவார் என பாஜக அறிவித்துள்ளது. மேற்குவங்க ஆளுநராக இருக்கும் ஜெகதீப் தன்கர் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் கடும் மோதல் போக்கினை கடைப்பிடித்து வந்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பி-க்கள் மற்றும் நியமன எம்.பிக்கள் வாக்களிப்பார்கள். மொத்தமுள்ள 775 எம்பி-க்களில் 388 எம்பி-க்கள் வாக்களித்தால் குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். பாஜக கூட்டணி வசம் 395 எம்.பிக்கள் இருப்பதால், பாஜக வேட்பாளரின் வெற்றி உறுதியாகி உள்ளது.
இருந்தும் எதிர்க்கட்சிகள் சார்பாக பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் வீட்டில் காங்கிரஸ், திமுக, சிபிஐ, சிபிஎம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் வெற்றி, தோல்வியை கடந்து எதிர்க்கட்சிகளிள் ஒருங்கிணைவது அவசியம் என்றும், பாஜகவுக்கு போட்டியளிக்க வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் இரு நாட்களே இருப்பதால், இன்று மாலைக்குள் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.